கிளிநொச்சி, முல்லைத்தீவு: 94 லொறிகளில் இன்று உணவுப் பொருட்கள்

aid-loryes1712.jpg
கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு 94 லொறிகள் இன்று வன்னி புறப்படுமென வவுனியா மாவட்ட செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். 94 லொறிகளில் பொருட்கள் கொண்டு செல்லப்படவுள்ளது. உலக உணவுத்தாபனம், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு 54 லொறிகளில் கோதுமை மா, பருப்பு சமையல் எண்ணெய், சீனி அடங்கிய சுமார் 600 மெற்றிக் தொன் பொருட்களை அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வவுனியா, தேக்கம்காடு களஞ்சியத்திலிருந்து லொறிகள் புறப்படும், அதேநேரத்தில், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரினால் அனுமதிக்கப்பட்ட சுமார் 300 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களும் மரக்கறிகளும் 40 லொறிகளில் அனுப்பிவைக்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 20 லொறிகள் வீதம் பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சி நகரம் பாதுகாப்பு படையினரிடம் வீழ்ந்த பின்னர் புறப்படும் முதலாவது உணவு லொறி தொடரணி இது என்பது குறிப்பிடத்தக்கது. வழமையான வீதி வழியாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் வழித்துணையுடன் உணவு தொடரணி வண்டிகள் செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை விடுவிக்கப்படாத கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டப் பிரதேசங்களில் தங்கியுள்ள மக்களுக்கென வாராவாரம் 80 லொறிகளில் அத்தியாவசிய உணவு உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்டச் செயலாளர் நேற்றுத் தெரிவித்தார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்களின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப இப்பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுவிக்கப்படாத பிரதேசங்களில் தங்கியுள்ள மக்களுக்கென அரசாங்கம் அனுப்பிவைக்கும் அத்தியாவசியப் பொருட்களுக்கு மேலதிகமாக உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள் என்பவற்றினதும் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *