”விக்னேஸ்வரன், பிறந்து வளர்ந்தது எல்லாம் கொழும்பில். இப்போது தமிழர்களை ஏமாற்றும் வகையில் பொய்யான ஒரு நாடகமாடுகிறார்.” – விமல் வீரவன்ஸ

சம்பந்தனை விட பெரிய தலைவராக வரவேண்டும் என்பதே சி.வி.விக்னேஸ்வரனின் ஆசை எனவும் தமிழர்களுக்கு யார் தலைவர்?  என்பதில் இவர்கள் இருவருக்கும் இடையில் போட்டி நிலவுகிறது எனவும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்து இனங்களுக்கும் சம அந்தஸ்து வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (24.08.2020) ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

திருமண வீடொன்றுக்கு ஒருவர் குடித்து விட்டு வந்து சர்ச்சைகளில் ஈடுபட்டால், ஏனையவர்கள் அச்சப்படமாட்டார்கள். அதுபோன்றுதான், சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் காணப்படுகின்றன.

அவருக்கு, சம்பந்தனைவிட பெரிய தலைவராக வேண்டும் என்பதுதான் ஆசை. தமிழர்களுக்கு யார் தலைவர் என்பதில், இவர்கள் இருவருக்கும் இடையில் போட்டி நிலவிவருகிறது. ஆனால், விக்னேஸ்வரனுக்கு அதற்கான தகுதி கிடையாது. அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் கொழும்பில். றோயல் கல்லூரியில் கல்வி பயின்றவர். இப்போது தமிழர்களை ஏமாற்றும் வகையில் பொய்யான ஒரு நாடகத்தைத்தான் அவர் அரங்கேற்றி வருகிறார்.

இதன் ஓர் அங்கமாகத்தான், நாடாளுமன்றுக்கு வந்து உலகிலேயே மூத்த மொழி தமிழ் மொழி என கருத்து வெளியிட்டுள்ளார். அவருக்கு நன்றாகத் தெரியும், அப்படி கூறினால் இனவாதத்தை இலகுவாகத் தூண்டிவிட முடியும் என்று. எம்மைப் பொறுத்தவரை யாழில் இருந்து வந்த சுதந்திரக் கட்சி உறுப்பினருக்கும் கிழக்கிலிருந்து வந்த அதாவுல்லா போன்றோருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் வாய்ப்பை வழங்க வேண்டும்.

இதுதான் எமது நிலைப்பாடாகும். இதுதான் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வழிமுறைகளாகும். நாம் இவ்வாறான செற்பாடுகளை மேற்கொள்ளும்போதுதான் அனைத்து சமூகங்களும் முன்னேற்றமடையும்.

அப்போது மட்டும்தான், சம்பந்தன் மற்றும் விக்னேஸ்வரனின் இனவாத அரசியலுக்கும் தேவை ஏற்படாது போகும். இன்னும் சில நாட்களில் புதிய அரசியலமைப்பு ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதன் ஊடாக இந்த நாடு மேலும் பலமடையும்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ, ஒரு நாடு – ஒரு சட்டம் என்ற கொள்கையில் மிகவும் தெளிவாக இருக்கிறார். ஒவ்வொருவருக்கும் தேவையான வகையில் சட்டங்களை வகுக்க நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

ஜனாதிபதி இம்முறை நாடாளுமன்றுக்கு வருகைத் தந்ததை நாம் அனைவரும் அவதானித்தோம். எந்தவொரு ஆடம்பரமும் இல்லாமல்தான் அவர் தனது வாகனத்தில் வந்தார்.

இதனை மதிக்கத் தெரியாதவர்கள்தான் இன்று எதிரணியில் இருந்துகொண்டு கூச்சலிடுகிறார்கள். அவர்களுக்கு குறைக்கூற எந்தவொரு காரணமும் கிடையாது என்பதால், ஜனாதிபதியின் வாகனம் வீதியின் கோட்டுக்கு இடையில் வந்ததாகக்கூட கூறுகிறார்கள்.

நாடாளுமன்ற வீதிக்கு, பொதுப்போக்குவரத்து சட்டங்கள் இல்லை என்பதுகூட அந்த தரப்புக்கு தெரியாமல் இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *