புலிகளின் தலைவர் பிரபாகரன் மேற்கொள்ளும் சதித்திட்டங்களை உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் முன்னெடுத்துச் செல்லும் கைக்கூலிகளாக – முகவர்களாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஜே.வி.பியினரும் செயற்பட்டு வருகின்றனர். – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ கூறியுள்ளார்.
கொழும்பில் (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு :- முன்னர் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்நாட்டிலும் சர்வதேச நாடுகளிலும் பாரிய சேதங்களை ஏற்படுத்திவந்தார். இப்போது அவரால் அவ்வாறு செய்ய முடியாது. புலிகள் யுத்த ரீதியாக பலத்த தோல்விகளைச் சந்தித்து வருகின்றனர். அவர்களின் இறுதி மூச்சு மிக விரைவில் அடங்கவுள்ளது. இந்தநிலையில் பிரபாகரனால் எந்தவிதமான தாக்குதல்களையும் மேற்கொள்ள முடியாது.
பிரபாகரன் தற்போது மேற்கொள்ளும் சதித்திட்டங்கள் அனைத்தும் முறியடிக்கப்படுகின்றன. இதனால் அவரின் சதித்திட்டங்களை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் அரங்கேற்றும் கையாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜே.வி.பியினரும் செயற்படுகின்றனர். தேசப்பற்றாளர்கள் போல் தங்களைக் காட்டிக்கொண்டு தேசத்துரோகச் செயற்பாட்டில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பிரபாகரனின் சதித்திட்டங்கள் மாத்திரமன்றி அவரின் கையாட்களின் செயற்பாடுகளும் அரசால் தோற்கடிக்கப்படும். அதற்கான சக்திகளை நாம் அரசுக்கு வழங்குவோம். – என்றார்.