மத்தியக் கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு 50,000-ஐத் தாண்டியுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து அல்ஜசிரா கூறும்போது, “மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 50,000-ஐக் கடந்துள்ளது. மேலும், போர் நடைபெறும் பகுதிகளான லிபியா, ஏமன், சிரியா நாடுகளில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் குறைவாகவே இருப்பதால், இறப்பு எண்ணிக்கை இன்னும் கூடுதலாகக் கூட இருக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லிபியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருப்பதால், அங்கு மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானில் அதிகபட்சமாக 22,044 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். அடுத்ததாக இராக்கில் 7,356 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது 180 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.
உலகம் முழுவதும் சுமார் 2.6 கோடிக்கு அதிகமானவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 1.8 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.