அடுத்த பெருந்தொற்றை சிறப்பாக சமாளிக்க உலகம் தயாராக இருக்க வேண்டும் ! – உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் தொற்று தான் உலகின் கடைசி வைரஸ் பெருந்தொற்றல்ல. அடுத்து வரும் வைரஸ் பெருந்தொற்றை சமாளிக்க உலகம் தற்போதை விட சிறப்பாக தயாராக இருக்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோதும் உலகம் முழுவதும் 02 கோடியே 70 இலட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் பல இலட்சத்தை நெருங்கி வருகிறது.

இந்நிலையில், அடுத்த பெருந்தொற்றை சிறப்பாக சமாளிக்க உலகம் தயாராக இருக்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெட்ரோஸ்,’இந்த கொரோனா வைரஸ் தொற்று தான் உலகின் கடைசி வைரஸ் பெருந்தொற்றல்ல.

பெருந்தொற்றும், சமூகப்பரவலும் வாழ்க்கையில் உண்மையானவை என்பதை வரலாறு நமக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டுதான் உள்ளது. ஆனால், அடுத்த பெருந்தொற்று வரும் நேரத்தில் உலகம் தற்போதுள்ள தயார் நிலையை விட இன்னும் சிறப்பாக சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்’ என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *