இந்திய மீனவர்கள் ட்ரோலர் படகுகளில் மன்னார் கடல் பிரதேசத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன் வளங்களை அழிப்பது தொடர்பில் மன்னார் மீனவர்கள் மூலம் அறிந்து கொண்டேன் என்று பாராளுமன்றத்தில் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
கடந்த 02 தினங்களுக்கு முன்பு நான் மன்னார் பிரதேசத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகுகளில் அப் பகுதியில் அத்துமீறி பிரவேசித்து மீன் வளங்களை அழிப்பது தொடர்பில் மன்னார் மீனவர்கள் மூலம் அறிந்து கொண்டேன். தற்போது கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலை காரணமாக அவ்வாறு அத்துமீறி பிரவேசிக்கும் மீனவர்களை கைது செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது என்றும் கூறினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர சபையில் பதிலளித்தார். இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் மீனவர்கள் கைது செய்யப்படுவர் அது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கடற்படைத் தளபதியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.
இதன் போது சபையில் இருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வடக்குக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என இந்தியாவிடம் கேட்பதை போலவே இதனையும் அவர்களிடமே சென்று தீர்வு காணுங்கள் என கடும் தொனியில் கூறியிருந்தமையும் நோக்கத்தக்கது.