தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலி – தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு மாவை.சேனாதிராஜா அழைப்பு.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்தில் இன்று (15.09.2020) தமிழ்க் கட்சிகள் ஒன்றுகூடவுள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி அடுத்தகட்ட நகர்வை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக ஆராய்வதற்காக கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “தியாகி திலீபனின் நினைவேந்தலை தாயகமெங்கும் மக்கள் வழக்கமாக அனுஷ்டித்து வருகிறார்கள். இம்முறை தடை உத்தரவு நீதிமன்றம் மூலம் பெறப்பட்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவா அல்லது வடக்கு பாதுகாப்பு தரப்பு எடுத்த நடவடிக்கையா என்பது தெரியவில்லை. அதையும் ஆராய வேண்டும்.

அரசின் கொள்கை முடிவென்றாலும் பாதுகாப்பு தரப்பின் நடவடிக்கையென்றாலும் தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை, தமிழ்ச் சட்டத்தரணிகள் நீதிப்பொறிமுறையின் ஊடாகவே பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுப்பது பற்றியும் நாம் ஆராயவுள்ளோம்.

அதுதவிர, யாழ். மாநகரசபை எல்லைக்குள் நினைவேந்தலை தடை செய்து நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளார்கள். இது தொடர்பாக இன்று மதியத்தின் பின் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றாக கூடி ஆராயவுள்ளோம். தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் அநேகமான கட்சிகள் இன்று சந்திப்பில் கலந்துகொள்வார்கள்” என தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *