தடையை நீக்கியது நீதிமன்றம் – நாளை இடம்பெறுகின்றது வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் !

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வவுனியா நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.

நெடுங்கேணி பொலிஸ் மற்றும் தொல்லியல் திணைக்களத்தால் ஆலயத்திற்கு செல்வதற்கு தடை விதிக்க கோரி,  வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கினை தள்ளுபடி செய்த மன்று, ஆலய உற்சவத்தை வழமை போன்று நடத்த அனுமதி வழங்கியதுடன், ஆலய நிர்வாகத்திற்கு இடையூறோ, அச்சுறுத்தலோ விடுக்க கூடாது எனவும் பொலிசாருக்கு பணித்துள்ளது.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் நாளை(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்  அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருக்கின்றது.

இந்நிலையில் ஆலய திருவிழாவினை தடுத்து நிறுத்த கோரி தொல்லியல் திணைக்களத்தினால் நெடுங்கேணி பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் ஆலய நிர்வாகத்தினரை நேற்று மாலை அழைத்த பொலிஸார் தொல்லியல் திணைக்களம் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை காண்பித்தனர்.

குறித்த கடிதத்தை காண்பித்த பொலிஸ் பொறுப்பதிகாரி அதில் சில விடயங்களை குறிப்பிட்டு தொல்லியல் சார்ந்த இடங்களை சிரமதானம் செய்ய முடியாது எனவும், அது தொல்லியலுக்குறிய இடம் அங்கு செல்வதோ திருவிழா செய்வதோ தடை செய்யுமாறு குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.

இதற்கு விளக்கமளித்த ஆலய நிர்வாகத்தினர் எமக்கான வழக்கு நீதிமன்றத்தில் சென்றுகொண்டிருக்கின்றது. எம்மை ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை செய்யுமாறு குறிப்பிட்டதோடு அபிவிருத்திகளை மாத்திரமே செய்ய முடியாது என குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தோம்.

இதனை ஏற்கமறுத்த பொலிஸ் பொறுப்பதிகாரி தொல்லியல் கூறிய கூற்றுக்கு இணங்கியே செயற்பட முடியும் என்றும் இன்று நீதிமன்றிற்கு வருகை தருமாறு அறிவித்தல் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் வவுனியா நீதிமன்றில் நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் ஆலயத்திற்கு செல்வதற்கும் வழிபடுவதற்கும் தடை விதிக்க முடியாது என கூறி வழக்கினை மன்று தள்ளுபடி செய்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *