கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய விதிமுறைகள் குறித்து விவாதிக்க இன்று பாராளுமன்றம் கூடியிருந்தது.
இன்றைய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்கள் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை எரித்து, அரசாங்கம் இனவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் தூண்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக நாம் கடந்த ஜனவரி மாதமே எச்சரித்திருந்தோம். உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரினோம். விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்டவற்றை மூடுமாறும் கோரினோம். ஆனால், அரசாங்கம் இவை அனைத்தையும் நிராகரித்தன.
இதனால், இன்று நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது கொரோனாவை வைத்து நாட்டில் பிரிவினைவாதத்தையே அரசாங்கம் தூண்டுகிறது. இஸ்லாம் மக்களை இலக்கு வைத்தே தற்போது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. கொரோனாவை பரப்புவதே முஸ்லிம் மக்கள்தான் என ஒரு பிரசாரம் கூறப்பட்டது. அத்தோடு அவர்களின் மார்க்கத்துக்கு முரணாக, இறந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. இது அடிப்படைவாத நடவடிக்கையாகும். உலகில் எந்தவொரு நாடும் இவ்வாறு சடலங்களை எரிக்கவில்லை.
இனவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் பரப்புவதில் தான் இந்த அரசாங்கம் தீவிரமாக உள்ளது. மார்ச் மாதத்திலிருந்து நாட்டுக்கு ஒரு வென்டிலேட்டரைக்கூட அரசாங்கம் வாங்கவில்லை. தரமான பி.சி.ஆர். இயந்திரங்களை கொள்வனவு செய்யவில்லை.
கொரோனா தொற்றாளர்களுக்கு படுக்கைகள் இல்லை. ஐ.சி.யு. படுக்கைகள் இல்லை. இவற்றை தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பலப்படுத்தும் 20 ஆவது திருத்தத்தை மட்டும் உடனடியாக கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளார்கள். அரசாங்கத்தின் கொரோனா ஒழிப்பு செய்பாடு இன்று தோல்வியடைந்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.