“யாரையும் கைவிடாத அமெரிக்காவை நாம் உருவாக்க போகின்றோம்” – அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோபைடன் “இது தொடக்கம்தான் . அமெரிக்காவில் இனவெறியை அகற்றுவோம் ” – துணைஜனாதிபதி கமலா ஹாரிஸ் !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 4 நாளாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது. 284 வாக்குகள் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றார். கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் வெற்றிக்குத் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஜோ பைடன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
“ஒட்டுமொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளது. அமெரிக்காவை மீட்டெடுப்பதற்கான நேரம் இது. என்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். நாட்டு மக்கள் வெற்றி மூலம் தங்கள் குரலை வெளிப்படுத்தியிருக்கின்றனர். இதைவிட சிறந்த நாள் வருமென்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். உலக அரங்கில் அமெரிக்காவின் மரியாதையை உயர்த்த உழைப்போம். கடந்த 4 ஆண்டுகளாக சமத்துவம், சம உரிமைக்காக நாம் போராடி வந்தோம். கொரோனா காலத்திலும் கட்சிக்காகவும் வெற்றிக்காகவும் உழைத்தவர்களுக்கு நன்றி.
ஆட்சி ஏற்றவுடன் நமது திட்டங்கள் அனைத்தும் அறிவியல் பூர்வமாக இருக்கும். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கே முன்னுரிமை.  அமெரிக்காவில் ஒவ்வொருவரின் பாதுகாப்பே எனது இலக்கு. எந்த பேதமும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் நம்மை ஆதரித்து இருக்கிறார்கள். வாய்ப்புகள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். பாராளுமன்றத்தில் அனைவரும் ஒன்றிணைந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும்.
நம்மால்  முடியும் என்ற முழக்கத்துடன் ஒபாமா ஆட்சிக்கு வந்தார். அவருடன் நான் இருந்தேன். யாரையும் கைவிடாத அமெரிக்காவை நாம் உருவாக்க போகின்றோம். அனைத்து அமெரிக்கர்களுக்குமான ஜனாதிபதியாக இருப்பேன்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் டெலவர் நகரில் மக்களிடம் வெற்றி  உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
“என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அமெரிக்க மக்களுக்கு  நன்றி.
வெற்றிக்கு உழைத்த மற்றும் வாக்களித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றிய அமெரிக்க மக்களுக்கு நன்றி. நம்பிக்கையுடன் அமெரிக்கா வந்த எனது தாயை இந்த வெற்றி தருணத்தில் நினைவு கூர்கிறேன்.
ஜனநாயகம் என்பது ஒரு நிலை அல்ல. அது ஒரு செயல்.
துணை ஜனாதிபதியாகியுள்ள நான் முதல் பெண் தான், கடைசி பெண் அல்ல. இது தொடக்கம்தான். ஒரு பெண்ணை துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யும் துணிச்சல் பைடனுக்கு இருந்திருக்கிறது.
நமது நாட்டின் பெண்களுக்கு நிறைய சாத்தியங்கள் உருவாக காத்திருக்கின்றன.
கடந்த 4 ஆண்டாக சமத்துவம், சம உரிமைக்காக நாம் போராடி வந்தோம். இன வெறியை அகற்றுவோம் என உறுதிபடக் கூறுகிறேன்.
பைடனுக்கு வாக்களித்ததன் மூலம்  நம்பிக்கை, கண்ணியம், ஒற்றுமைக்கு வாக்களித்துள்ளீர்கள்” என தெரிவித்துள்ளார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *