“தொழிற்சாலைகளை உருவாக்கி தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனும் ஸ்ரீதரனின் கருத்தை வரவேற்கிறேன்” – பாராளுமன்றில் விமல்வீரவங்ச

புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய விரும்பினால் வடக்கில் மாத்திரம் அல்ல தெற்கிலும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முழுமையான ஏற்பாடுகளை செய்துகொடுக்க தயாராக உள்ளோம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நேற்று (04.12.2020) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கைத்தொழில் வர்த்தக அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகள் மீதான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளதாவது,

“வடக்கு- கிழக்கிலுள்ள தொழிற்சாலைகளை மீளவும் இயக்கி நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் பங்களிப்பை பெற்றுக்கொள்ளவே நாம் வேலைத்திட்டங்களை உருவாக்கியுள்ளோம்.வாழைச்சேனை தொழிற்சாலை, ஒட்டுச்சுட்டான் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் உள்ளிட்ட பிரதான தொழிற்சாலைகளை மீள் அபிவிருத்தி செய்வதுடன், பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கவுள்ளோம். குறிப்பாக பரந்தன் இரசாயன தொழிற்சாலை உள்ள பிரதேசத்தை இரசாயான வலயமாக மாற்றியமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டங்களில் வடக்கு, கிழக்கு மக்களுக்கான பணிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இதில் வடக்கு கிழக்கு மக்கள் எந்த சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை. வடக்கு மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகள் குறித்து பல காரணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார். தொழிற்சாலைகளை உருவாக்கி தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அவர் தெரிவித்தமையை நான் முழுமையாக வரவேற்கிறேன். அதேபோல் வெளிநாடுகளில் உள்ள தமிழ் செல்வந்தர்கள் இலங்கையில் முதலீடுகளில் விருப்பம் காட்டுவதாக தெரிவித்தார்.

அவ்வாறான முதலீட்டாளர்கள் இருந்தால் எம்முடன் தொடர்புபடுத்தி விடுமாறு ஸ்ரீதரனிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறான தமிழ் முதலீட்டாளர்கள் வடக்கில் மாத்திரம் அல்ல தெற்கில் வேண்டுமானாலும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட நாம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *