வெள்ளத்தில் மூழ்கிப்போன முல்லைத்தீவின் கிராமங்கள் !

அண்மைய நாட்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மழையினால் பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டதோடு யாழ்ப்பாணம் கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக கனமழை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகபட்ச மாக 402 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பாதிவாகியதோடு சுமார் 700க்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்தும் பல பகுதிகளில் கனமழை பொழிந்துள்ளது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் ,பனிக்கன்குளம், திருமுறிகண்டி , இந்துபுரம் பகுதிகளில கன மழை பொழிந்துள்ளது.

இதனால் மாங்குளம் துணுக்காய் வீதியில் ஒரு பகுதியல் உள்ள வீடுகளும்  பனிக்கன்குளம்  கிராமத்தில் ஒரு பகுதியில் உள்ள வீடுகளும்  பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை திருமுறிகண்டி இந்துபுரம் ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த நான்கு கிராமங்களிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளை சூழ வெள்ளம் காணப்படுகின்ற  நிலையில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் .இந் நிலையில் இந்துபுரம் கிராம அலுவலர் பிரிவில் மிகவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள் வெள்ளம் சென்று வீடுகளில் தங்க முடியாத நிலையில் இருந்த சுமார் பத்து குடும்பங்கள் வரையில் இந்துபுரம் பொது நோக்கு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கிராமத்தில் இவ்வாறு குடும்பங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் இரவு 9 மணி அளவில் குறித்த பகுதிக்கு சென்ற இந்துபுரம் கிராம இளைஞர்கள் மற்றும் குறித்த பகுதி  புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் செல்லையா பிறேமகாந் உள்ளிட்டவர்கள் சென்று மக்களை குறித்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வந்து பொதுநோக்கு மண்டபத்தில் தங்க வைத்தனர். இந் நிலையில் குறித்த பொதுநோக்கு மண்டபத்துக்கு ஒட்டுசுட்டான் பிரதேச  செயலாளர் த.அகிலன்  மற்றும் மாங்குளம் காவல் நிலைய அதிகாரிகள் வருகை தந்து மக்களது நிலைமைகளை நேரில் பார்வையிட்டு சென்றனர்.
சுமார் பத்து குடும்பங்கள் வரையில் பொதுநோக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளதோடு இந்துபுரம் மற்றும் திருமுறிகண்டி கிராமங்களில் பல வீடுகளை வெள்ளம்  சூழ்ந்துள்ள நிலையில் பலர் வீடுகளில் முடங்கியுள்ளனர்.இவ்வாறு பலர் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் தொடர்ந்தும் மழை பெய்து கொண்டு இருக்கின்ற நிலைமையில்  இன்னும் பலர் பாதிக்கப்பட்டு வதற்கு  வாய்ப்புகள் காணப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *