புதுச்சேரியில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அதிதி என்ற ஹோட்டல் தாக்கி சூறையாடப்பட்டது. சென்னையில் இலங்கை வங்கியும், இலங்கை துணைத் தூதரகமும் சமீபத்தில் சிலரால் தாக்கப்பட்டன. இந்த நிலையில் புதுவையிலும் இலங்கையர்களுக்கு எதிரான தாக்குதல் பரவியுள்ளது. புதுச்சேரி காந்தி வீதி – படேல் சாலை சந்திப்பில் இலங்கையை சேர்ந்தவர்கள் நடத்தும் அதிதி என்ற ஹோட்டல் உள்ளது. நேற்று நள்ளிரவு 8 வாலிபர்கள் 5 மோட்டார் சைக்கிளில் வந்தனர். ஹோட்டல் மீது அவர்கள் திடீரென்று சரமாரியாக கல்வீசி தாக்கினார்கள்.
அந்த சமயத்தில் அப்பகுதியில் ரோந்து போய்க் கொண்டிருந்த போலீஸ்காரர் செந்தில் குமார், ஊர்காவல் படை வீரர் நாராயணசாமி ஆகியோர் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் போலீஸ்காரரும், ஊர் காவல் படைவீரரும் காயம் அடைந்தனர். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் விரட்டிச்சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். பிடிபட்ட நபர் பூமியான் பேட்டையை சேர்ந்த செல்வம் (32) என்றும், அவர் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தொண்டர் என்றும் தெரிய வந்தது.