“எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே அதற்கு பொறுப்பேற்கவேண்டும்” – பாராளுமன்றில் எம்.ஏ.சுமந்திரன் !

“எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே அதற்கு பொறுப்பேற்கவேண்டும்” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த நாடாளுமன்ற உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அநேக காலமாக இவ் 1,000 அடிப்படை சம்பள உயர்வுக்காய் கோரிக்கை முன்வைத்தபோதும் அதிகரிக்கும் வாழ்க்கை செலவுடன் நோக்குகையில் தற்போது இது 2,000 ரூபாயாக இருத்தல் வேண்டும்,

இருப்பினும் அந்த 1,000 ரூபாய் உயர்வு கூட இன்னும் வழங்கப்படாதிருக்கின்றது. கடந்த சில நாட்களாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடை பயணத்தில் நாம் 10 கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தோம். அவற்றுள் இந்த 1,000 ரூபா சம்பள உயர்வும் ஒன்றாகும். தகவலின் திரிபுகளை தவிர்க்கவும், பதிவு செய்துகொள்ளும் நோக்கத்திற்காகவும் அந்த 10 கோரிக்கைகளையும் வாசிக்கிறேன்.

1. தொடர்ச்சியான நில அபகரிப்பு மற்றும் இந்து கோவில்களை அப்புறப்படுத்தி அதில் பௌத்த விகாரைகளை அமைத்தலின் மூலம் தமிழர்களின் வரலாற்று பகுதிகளை சிங்கள மயமாக்கல்.

2. யுத்தம் நிறைவுற்று 10 வருடங்களுக்கு மேலானாலும் இன்னமும் தமிழர் பகுதிகளில் இராணுவ மயமாக்குதல் மற்றும் தமிழரின் பிரதேசங்களை பௌதீக ரீதியில் சிங்கள மயமாக்க அரச திணைக்களங்களை விசேடமாக தொல்பொருள் திணைக்களத்தினை உபயோகித்தலும் அரச அனுசரணையுடன் சிங்கள குடியேற்றங்களை முன்னெடுத்தலும்.

3. மனித உரிமை மீறல் தொடர்பாக வெளிச்சத்துக்கு கொண்டுவரும் ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமை துஷ்பிரயோகம் தொடர்பாக எதிர்க்கும் சிவில் சமுக ஆர்வலர்களையும் அரசு தொடர்ந்தும் இலக்கு வைத்தல்.

4. தமிழ் பண்ணையாளர்கள் தமது பசுக்களை கொண்டு செல்லும் மேய்ச்சல் தரையினை சிங்கள பண்ணையாளர்கள் ஆக்கிரமித்தல் மற்றும் பசுக்கள் கொல்லப்படல் போன்ற பிரச்சினைகள்.

5. மரித்த தமது உறவுகளை தமிழர்கள் நினைவு கூறும் உரிமை மறுக்கப்படுத்தல் மேலும், கல்லறைகள் மற்றும் நினைவு தூபிகள் என்பன அழிக்கப்படல்.

6. கோவிட் – 19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லீம்களின் ஜனாஸா அவர்களது குடும்பத்தின் விருப்புக்கும் சமய நம்பிக்கைக்கு எதிராகவும் வலுக்கட்டாயமாக எரிக்கப்படல்.

7. தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு எவ்வித வழக்குகளும் பதியப்படாது 40 வருடங்களுக்கு அதிகமாக தடுப்பில் இருக்க பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டம் இன்று முஸ்லீம் இளைஞருக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றமை.

8. அரசாங்கம் சிங்கள கைதிகளை கிராமமான முறையில் விடுதலை செய்து வருகின்ற போதும் எந்த ஒரு தமிழ் அரசியல் கைதியும் விடுதலை செய்யப்படாமலும், வழக்குகள் விசாரணைகளின்றியும் இருத்தல்.

9. காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் தொடர்ச்சியாக தமது உறவுகளுக்கான தீர்வினை வேண்டியும் அரசாங்கம் அவர்களுக்கான பதிலினை வழங்காதுள்ளமை.

10. மலையக தோட்ட தொழிலாளர் 1000 ரூபா சம்பள உயர்வினை கோரினாலும் அரசாங்கம் அதற்கு பதில் வழங்காதுள்ளமை.

இவையே 01.02.2021 திகதியிடப்பட்ட வட-கிழக்கு சிவில் சமூகத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கோரிக்கைகளாகும். இந்நடை பயணமானது சிவில் சமூகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு எமது கட்சியினாலும் ஆதரிக்கப்பட்டது. இவை நியாயமான கோரிக்கைகளாகவும் நீதிக்கான விடயங்களாகவும் காணப்பட்டதோடு, ஜனநாயக முறையில் எமது எதிர்ப்பினை நாம் தெரிவித்திருந்தோம்.

இப்பேரணி சமாதானமான முறையில் நடைபெற்றதோடு அநேகர் திரண்டு வந்து தமது ஆதரவினை தெரிவித்து இதனை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். எனவே இவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து வடக்கு கிழக்கு மக்களுக்கு பதிலளிக்க வேண்டுமென அரசாங்கத்தினை கேட்டுக்கொள்கிறேன்.

இந்நிகழ்வு நிறைவுற்ற மறுகணமே எனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டது. எந்த சந்தர்ப்பத்திலும் எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக நான் எங்கும் முறையிடாத போதும், அரசாங்கமே எனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தது.

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் HC 242 /2018 எனும் வழக்கு பதியப்பட்டு நால்வர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர் இவ்வாறான ஏராளமான வழக்கு தொடர்பான ஆவணங்கள் என்னிடமுள்ளன.

மேலும் 15 தெற்கின் சிங்கள பாதாள குழுக்களின் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 30 பேரை தடுப்பில் வைக்கும் வரை இவை தொடர்பாக நான் எதனையும் அறிந்திருக்கவில்லை. எனவே எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக எனக்கு தெரிவிக்காது அல்லது நான் முறையிடாத போது அரசாங்கம் அநேகமானோரை தடுப்பில் வைக்குமானால் தற்போது அதை மீளப்பெறுவதேன்? பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் உண்மையாக இருக்குமாயின், நான் பேரணியில் பங்குபற்றியமைக்காக அரசாங்கம் என்மீது எரிச்சலடைந்து இத் திடீர் நீக்கத்தை செய்திருக்கலாம்; அல்லாவிடின், பொய்யாக எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறதென்று காட்டிக்கொண்டு, அரசு அப்பாவி இளைஞர்களை தடுப்பில் வைத்திருப்பதாகத் தான் கருத நேரிடும்.

இவையிரண்டும் இல்லாவிடின், மிகவும் வஞ்சனையான காரணமாக நான் கருதுவது, எனது பாதுகாப்பினை அகற்றுவதன் மூலம் எனக்கு தீங்கு விளைவிக்க காத்திருப்போருக்கு இது அவர்களுக்கான ஓர் சமிக்ஞையாக இருக்கலாம். ஆகவே எனக்கேதேனும் பாதகம் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.” என சுமந“திரன் கூறியுள்ளார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *