“புலிகளால் கொலையுண்ட எமது மக்களின் சடலத்தின் மேல் மீண்டும் ஒரு முறை பயணிக்க எவர் விரும்புவர்?” – பொலிகண்டி தொடங்கி பொத்துவில் போராட்டம் தொடர்பாக இஸ்லாமிய ஒற்றுமை அமைப்பின் பிரசார பிரிவு துண்டுப்பிரசுரம் !

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம், அண்மையில் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் ஊடாக இஸ்லாமிய ஒற்றுமை அமைப்பின் பிரசார பிரிவு எனும் அமைப்பினால் துண்டுப்பிரசுரங்கள் விநியாகம் செய்யப்பட்டுள்ளன.

குறித்த பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

கடந்த சில நாட்களாக சாணக்கியன் என்றும் அவர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கிறார் என்றும் எம்மில் பலர் பலவாறும் புகழ்ந்து கெண்டிருந்தோம். ஆனால் கடந்த 3ஆம் திகதி சாணக்கியனின் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்ற பேரணியில் தனது பசுத்தோலைக் கழட்டி வைத்து விட்டு சுமந்திரனுடன் இணைந்து புலியாக புறப்பட்ட போது தான் அவர்களது நோக்கத்தை முஸ்லிம்களாகிய நாம் சரிவரக்கண்டு கொண்டோம் .

முப்பது வருட கொடூர யுத்தம், அந்த யுத்தத்தில் புலிகளோடு நின்றவர்களையே நஞ்சூட்டி கொன்றது கசப்பான வரலாறு. அத்தோடு உடுத்த உடையுடன் எம்மை துரத்தி அடித்து தொழுகையில் வைத்து நம்மை கொன்று குவித்து , படுகொலை செய்த கொடூரர்களின் அடிவருடிகளான இவர்கள் மீண்டும் தனி நாடு கோரும் படலத்தை ஆரம்பித்தனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அத்துண்டு பிரசுரத்தில் அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளை செய்து கொண்டே இருந்தனர். அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளைப் பெயர்த்து விடக் கூடியவைகளாக இருந்த போதிலும், அவர்களின் சூழ்ச்சிக்கு உரிய தண்டனை அல்லாஹ்விடம் இருக்கிறது.

எனும் அல் குர்ஆனின் 14அத்தியாயத்தின் 46ஆவது வசனத்தை மேற்கோள் காட்டியதை தொடர்ந்து, இறைவன் இவ்வாறு கூறி இருக்க நாம் தமிழ் தேசியம் பேசும் குழுக்களின் சதி வலைக்குள் சிக்குவது நியாயமா? இதில் எம்மவர்கள் சிலரும் கலந்து கொண்டது வேதனைக்குரிய விடயம். ஏன் எதற்காக என அறியாத இளைஞர்களை பலிக்கடாக்களாக களத்தில் இறக்க எந்த பெற்றோர்கள் தான் விரும்புவர்? எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளால் கொலையுண்ட எமது மக்களின் சடலத்தின் மேல் மீண்டும் ஒரு முறை பயணிக்க எவர் விரும்புவர்? ஆனால் இங்கு நடந்தது என்ன? அவர்களின் நோக்கத்திற்காக எம் முஸ்லிம்களின் பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் எமது முஸ்லிம் சமூக தலைவர்கள் என்போர் எம்மை கொன்று குவித்த புலிகளை விடுதலை செய்யுமாறு கோஷமிட்ட சம்பவமே ஆகும்.

இனியும் நம்மவர்கள் அவர்களின் பேச்சை நம்புவதன் ஊடாக எமக்கு கிடைப்பது என்ன? அவப்பெயரே அன்றி வேறு எதுவுமில்லை. நம்மவர் இனியேனும் சிந்தித்து செயற்படா விட்டால் எமது முஸ்லிம் சமூகத்திற்கு பாரியதொரு துரோகத்தை செய்தவர்களாக நாம் ஆகி விடுவோம் என்பதே உண்மை என அந்த துண்டு பிரசுரைத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த துண்டுப்பிரசுரமானது இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG 20210212 WA0011

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *