“தற்போதைய அரசு இந்தியாவுக்கு எதிராகச் செயற்பட்டு இந்தியாவை கோபப்படுத்துவதற்காகச் செயற்படுகின்றார்கள்” – சி.வி.விக்னேஸ்வரன்

“தற்போதைய அரசு இந்தியாவுக்கு எதிராகச் செயற்பட்டு இந்தியாவை கோபப்படுத்துவதற்காகச் செயற்படுகின்றார்கள்” எனத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீன நிறுவனம் ஒன்றுக்கு மின்சக்தி உற்பத்
திக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“அண்மையில் ஒரே நாளில் இரு வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரே நாளில் அரசு இரண்டு வேறுபட்ட தீர்மானங்களை எடுத்துள்ளது. கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்க முடியாது என அறிவித்துள்ளது.

அதேபோல வடக்கு மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் நெடுந்தீவு, அனலைதீவு,
நயினாதீவு ஆகிய மூன்றையும் சீனக் கம்பனிக்கு மின்சக்தி தயாரிப்பதற்காக கொடுப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள். இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.

முதலாவது இந்தியாவுக்கு கிழக்கு முனையத்தைக் கொடுக்காமை சம்பந்தமாக இந்தியா பார்த்துக்கொள்ளும். ஆனால் வடக்கு மாகாணத்திலுள்ள மூன்று தீவுகளைக் கொடுப்பது என்பது எமது வடமாகாண பாதுகாப்புக்கு மிகவும் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது
எனது கருத்து.

தற்போதைய அரசு இந்தியாவுக்கு எதிராகச் செயற்பட்டு இந்தியாவை கோபப்படுத்துவதற்காகச் செயற்படுகின்றார்கள். 13ஆவது திருத்தச் சட்டத்தின்படி எமது பகுதி காணிகளை ஜனாதிபதி வழங்குவதாக இருந்தால்கூட அது மாகாண சபையின் ஊடாக செய்யப்பட வேண்டும் என்று இருக்கின்றது.

எனினும் மாகாண சபையுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் அதற்குப் பதி
லாக ஆளுநரின் ஊடாக அதற்குரிய அனுமதியைப் பெற்றுச் செய்வது மிகவும் சட்டத்துக்கு முரணானது.

எமது தமிழ்ப் பிரதிநிதிகளும் இது தொடர்பில் தமது தீர்மானத்தைத் தெரிவிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. எதிர்காலத்தில் எமது சந்ததியினருக்கு இதனால் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நிலை காணப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து 49 கிலோ மீற்றர் தூரத்திலே உள்ள தீவுகளை இவ்வாறு வேறு
ஒரு நாட்டுக்குக் கொடுப்பது என்பது பாரதூரமான விடயமாகும். அதேபோல் இலங்கை அரசு இதனைத் தெரியாமல் செய்யவில்லை.தெரிந்துகொண்டுதான் செய்கின்றது.

அதாவது ஜெனிவாவில் இந்தியாவுடைய ஆதரவைத் தாங்கள் பெறுவதற்காக
இவற்றை நிறுத்துவதாக இருந்தால் நீங்கள் எங்களுக்கு ஜெனிவாவில் நன்மைகள்
பெற்றுத் தர வேண்டும் என்ற அடிப்படையிலும் இவற்றைச் செய்கின்றார்கள் என்பது எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *