“இலங்கையில் தற்போது பரவும் புதிய கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தான அதே நேரம் முன்னரைவிடவும் தீவிரமாகப் பரவும் தன்மை கொண்டது.”  – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

“இலங்கையில் தற்போது பரவும் புதிய கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தான அதே நேரம் முன்னரைவிடவும் தீவிரமாகப் பரவும் தன்மை கொண்டது.”  என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பொதுமக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும், விசேடமாக இந்தியாவின் நிலைமையைக் கருத்தில் கொண்டு அனைவரும் பொறுப்புடன் செயற்படும் படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் கொரோனாவின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ், முன்னரைவிடவும் தீவிரமாகப் பரவும் தன்மை கொண்டது. இந்த வைரஸ், தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் தோன்றும்போது நோயாளியின் நுரையீரலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது.

பிரிட்டனில் பரவி வரும் கொரோனா வைரஸை ஒத்த வைரஸே இலங்கையிலும் பரவுகின்றது எனத் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளிலிருந்து அறியமுடிகின்றது. எனினும், உத்தியோகபூர்வ முடிவுகளை வெளியிட சில தினங்கள் ஆகலாம்.

எனினும், பொது மக்கள் அதுவரை, காத்திருக்காது சுகாதார விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *