“அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளின் இலங்கை மீதான தீர்மானம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் புத்துயிர் ஊட்டும் வகையில் அமைந்துள்ளது.” – அமைச்சர் விமல் வீரவன்ச

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளின் 12 வருடப்பூர்த்தியையொட்டி அமெரிக்க காங்கிஸ் கட்சியின் பிரதிநிதியான டெபோரா கே.ரோஸினால் ‘ பொறுப்புக்கூறலை நிலைநாட்டும் நோக்கிலான செயற்திறன்மிக்க சர்வதேசப் பொறிமுறை ‘ மற்றும் ‘ இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ‘ ஆகிய தலைப்புக்களில் கடந்த மேமாதம் 18 ஆம் திகதி அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் தீர்மானமொன்று முன்வைக்கப்பட்டது .

இலங்கையில் போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு 12 வருடங்கள் கடந்துள்ளமையையும் , இதன்போது முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரால் பாரிய மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையையும் அந்தத் தீர்மானம் ஏற்றுக்கொண்டிருந்தது . அதேவேளை இலங்கைவாழ் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கான யிரிழப்புக்களுக்கும் காணாமலாக்கப்படல் சம்பவங்களுக்கும் இடப்பெயர்வுகளுக்கும் முகங்கொடுத்துள்ளனர் என்று அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .

மேலும் குறிப்பாக போரினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் உள்ளடங்கலாக தமிழ்மக்களின் பாரம்பரிய வாழ்விடம் தற்போது இரண்டு பிரஜைகளுக்கு ஒரு இராணுவவீரர் என்ற விகிதாசாரத்தில் மிகையாக இராணுவமயமாக்கப்பட்டுள்ளது என்றும் அத்தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது . இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி தீர்மானம் தொடர்பான தமது நிலைப்பாட்டை இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது .
அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு :
பில் ஜோன்சன் , டேனி டேவிஸ் , பிரெட் ஷெர்மன் மற்றும் கேத்தி மெனிங் ஆகிய நான்கு பிரதிநிதிகளுடன் இணைந்து டெபோரா கே.ரோஸினால் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் கடந்த மேமாதம் 18 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம் . இந்தத் தீர்மானம் கடந்த மேமாதம் 18 ஆம் திகதி வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான சபைக்குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது . இந்தத் தீர்மானத்தின் நோக்கம் தொடர்பில் கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் , ஆதாரமற்றதும் நிறுவப்படாததுமான அப்பட்டமான பொய்க்குற்றச்சாட்டுக்களைக் குறித்த தீர்மானம் உள்ளடக்கியுள்ளது . இத்தீர்மானத்தின் உள்ளடக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிடுகின்றது . முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் தவறானதும் பக்கச்சார்பானதும் ஒருதலைப்பட்சமானதுமான தன்மையைக் கருத்திற்கொண்டு நோக்கும்போது , இது வெறுமனே மனித உரிமை சார்ந்த தீர்மானம் அல்ல என்பது தெளிவாகின்றது .
 32நாடுகளில் பயங்கரவாத அமைப்பென்ற அடிப்படையில் தடைசெய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்காக அமெரிக்கக் காங்கிரஸில் உள்ள ஒத்த கருத்துடைய தமிழீழ விடுதலைப்புலிகளின் அனுதாபிகளாக அறியப்பட்டவர்களின் தலையீட்டினால் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானமாகவே இதனைக் கருதவேண்டியிருக்கிறது . இந்தத் தீர்மானம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் பிரதிபலிப்பு மற்றும் நிலைப்பாடு என்பன அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக வெளிநாட்டு விவகாரங்கள் சபை , ஆசியா தொடர்பான துணைக்குழு சபை மற்றும் கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்குச் சமர்ப்பிக்கப்படும் என்று அவ்வறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது .

இலங்கை தொடர்பில் அமெரிக்க காங்கிரஸில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட ஆயுத இயக்கங்கள் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காக போராடின என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானம் தொடர்பில் இலங்கை தனது ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தது. அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர், இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டு நகர்த்த வேண்டாம் என்று கோரியிருந்தார். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் துணைத் தூதரை நேரில் அழைத்து கண்டனம் வெளியிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு நடவடிக்கை ஏன் இலங்கை அரசு அவசர அவசரமாக மேற்கொள்கின்றது என்று அமைச்சர் விமல் வீரவன்சவிடம் ஊடகங்கள் வினவியபோது,

“இலங்கை தொடர்பான விடயத்தைக் குறிப்பிட்டு அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியமையால்தான் அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்தோம். கண்டனங்களையும் தெரிவித்தோம். எமது இந்த நடவடிக்கை அவர்களின் மீதான தீர்மானத்தின் அச்சத்தால் எடுக்கப்பட்டது என்று எவரும் அர்த்தம் கற்பிக்கக் கூடாது. அது தவறு.”இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

“அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளின் இலங்கை மீதான தீர்மானம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் புத்துயிர் ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. அப்பட்டமான பொய்க்குற்றச்சாட்டுக்கள் இந்தத் தீர்மானத்தில் உள்ளன. இந்தத் தீர்மானத்துக்கு இலங்கை அரசு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

தீர்மானம் தொடர்பான இலங்கை அரசின் நிலைப்பாடு வொஷிங்டனுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. தீர்மானம் போல் இலங்கை அரசை அடிபணிய வைக்கும் நோக்கில் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானமும் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும், இரு தீர்மானங்களையும் நாம் அடியோடு நிராகரிக்கின்றோம்.

அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம், இலங்கை மீதான தீர்மானம் என்றபடியாலேயே அமெரிக்க அதிகாரிகளை அரச தரப்பினர் நேரில் சந்தித்துப் பலத்த கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். அச்சம் காரணமாகவே அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்தது என எவரும் அர்த்தம்கொள்ளக்கூடாது” – என்று பதிலளித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *