மன்னார்-முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கரடிக்குளி கடற்கரை பகுதியில் எரிகாயங்களுடன் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று இன்று சனிக்கிழமை (19) காலை கரையொதுங்கியுள்ளது.
கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின் மன்னார் மாவட்ட கடற்கரையோரங்களில் தொடர்ச்சியாக கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மன்னார்- முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கரடிக்குளி கடற்கரை பகுதியில் எரி காயங்களுடன் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுளளது.
ஏற்கனவே குறித்த கப்பலின் இரசாயன கழிவுகள் கரை ஒதுங்குவதால் வாழ்வாதாரத் தொழில் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட மீனவர்கள் குறித்த திமிங்கலம் கரை ஒதுங்கியதால் மேலும் அச்சமடைந்துள்ளனர்.
அண்மைக்காலமாக மன்னார் மாவட்டத்தில் தாழ்வுபாடு,வங்காலை மற்றும் சிலாபத்துறை கடற்கரை பகுதிகளில் உயிரிழந்த நிலையிலும்,கடுமையான காயங்களுடனும் கடலாமைகள் கரை ஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை கடற்கரையிலும் இறந்த நிலையில் திமிங்கிலம் ஒன்றும் , மட்டக்களப்பு தாழங்குடா கடற்கரை பகுதியில் மேலும் ஒரு டொல்பின் மீன் இனம் உயிரிழந்த நிலையிலும், கல்முனை மாநகர பெரிய நீலாவணை பிரதேச கடல் மற்றும் பாண்டிருப்பு பிரதேச கடலில் மூன்று கடலாமைகளும் கரை ஒதுங்கியுள்ள சம்பவமானது சூழலியளாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.