நீண்ட நாட்களாக அமுலில் உள்ள பயணத்தடை காரணமாக சாதாரண குடும்பங்கள் மிகப்பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன. முக்கியமாக உணவு தொடர்பான பிரச்சினை பல குடும்பங்களை வாட்ட ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அரசினால் வழங்கப்பட்டிருந்த 5000 ரூபாய்கூட மக்களை ஒழுங்காக போய்ச்சேரவில்லை. கடந்த வருட ஊரடங்கு நேரம் தேர்தல் காலம் என்பதால் பலருடைய உதவிகள் மக்களுக்கு கிடைத்திருந்தது. ஆனால் இந்நத வருடம் அப்படியான உதவிகள் கூட இல்லாது போயுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான மக்களுடைய அதிருப்தி வௌிப்பட ஆரம்பித்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக நுவரெலியா- வட்டவளை, கரோலினா தோட்டத்திலுள்ள மக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வுக் கோரி, ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கூறியதாவது,
“பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக வெளியிடங்களுக்கு சென்று தொழில் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் நாம் வாழ்வாதாரத்தை இழந்து தற்போது நிர்க்கதியாகி உள்ளோம். மேலும் குறித்த காலகட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபாய் நிவாரணம் கூட இதுவரை எமக்கு கிடைக்கவில்லை.
இதனால் எம்முடன் சேர்ந்து எங்களது பிள்ளைகளும் ஒருவேளை உணவுக்காக கஸ்டப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தோட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட எங்களது பகுதிக்கு வருகைத்தந்து எமது நிலைமைகள் தொடர்பாக கவனம் செலுத்தவில்லை.
ஆகவே, எங்களது இத்தகைய பிரச்சினைக்கு உரிய தீர்வை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என போராட்டத்தில் ஈடுபட்டோர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.