காட்டுத்தீயாய் பரவும் புதிய வகை கொரோனா – கட்டுப்படுத்த முடியாது திணறும் லத்தீன் அமெரிக்கா !

கொரோனா பாதிப்பு பெரும்பாலான நாடுகளில் குறைய தொடங்கியபோது அந்த வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் வெவ்வேறு வகையில் உருமாற்ற கொரோனா வைரஸ் பரவியது தெரிய வந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உருமாற்ற வைரஸ் லத்தீன், அமெரிக்க நாடுகளில் பரவி உள்ளது என்றும், இதற்கு லாம்ப்டா என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு கூறும்போது, லாம்ப்டா என்ற உருமாற்றம் அடைந்தகொரோனா வைரஸ்  பெரு நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வகையான வைரஸ் 29 லத்தீன், அமெரிக்க நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக அர்ஜென்டினா, சிலி போன்ற நாடுகளில் வைரஸ் பரவி இருக்கிறது.

இந்த உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரசின் தாக்கம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே டெல்டா வகை கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்றொரு புதிய வகை கொரோனா வைரசை உலக சுகாதார அமைப்பு கண்டறிந்துள்ளது.

இதற்கிடையே டெல்டா வகை கொரோனா வைரஸ் உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அந்த வைரஸ் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் மாறி வருகிறது என்றும், அதன் பரவும் தன்மை அதிகரித்து வருகிறது என்றும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *