“மாகாணசபைகளின் கீழுள்ள வைத்தியசாலைகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். சுகாதார அமைச்சு நிதி தராது.” – சார்ஸ்சுக்கு அமைச்சர் பவித்ரா பதில் !

“மாவட்டங்கள் விரும்பாதுவிட்டால் நாம் வைத்தியசாலைகளை எமது பொறுப்பில் எடுக்கமாட்டோம். அதேவேளை, மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கவும் மாட்டாது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் , ” வடக்கில் மாகாண சபையின் கீழுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் எடுக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யவே அவ்வாறு மத்திய அரசின் கீழ் எடுக்கப்படுவதாக காரணம் கூறப்படுகின்றது. ஆனால், உண்மையான நோக்கம் அதுவாக இருக்க முடியாது. இந்த வைத்தியசாலைகளை இதுவரை மாகாண சபைதான் அபிவிருத்தி செய்து வந்தது. வடக்கில் மாகாண சபையின் கீழுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் எடுப்பதனை ஏற்க முடியாது. அரசிலுள்ள வடக்கு மாகாண பிரதிநிதிகள் கூட இதனை ஏற்கமாட்டார்கள் என்றே நான் கருதுகின்றேன்’ என தெரிவித்தார்.

இதற்குப் பதிலளிக்கும்போதே, “மாவட்டங்கள் விரும்பாது விட்டால் நாம் வைத்தியசாலைகளை எமது பொறுப்பில் எடுக்க மாட்டோம். அவர்களே அதனை வைத்திருக்க முடியும். அதேவேளை, மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு மூலம் நிதி ஒதுக்கபடவும் மாட்டாது” என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *