32-வது ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 204 நாட்டு அணியினரும் தங்களது தேசிய கொடியுடன் மிடுக்காக அணிவகுத்து சென்றனர். போட்டியை நடத்தும் நாடான ஜப்பான் நாட்டின் தேசியக்கொடி முதலில் கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் மற்ற நாடுகளின் வீரர், வீராங்கனைகள், அணிவகுத்து அரங்கினுள் நுழைந்தனர்.
இதேபோல் ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது முறையாக பங்கேற்கும் அகதிகள் ஒலிம்பிக் அணி வீரர்களும் தங்கள் கொடியுடன் அணிவகுத்து சென்றனர்.
அகதிகள் ஒலிம்பிக் அணி 2016 ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் முதல்முறையாக பங்கேற்றது. போர் உள்ளிட்ட காரணங்களுக்காக தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் அகதிகளாக தங்கியுள்ளவர்களின் ஒலிம்பிக் கனவை நனவாக்கும் வகையில் அகதிகள் ஒலிம்பிக் அணி என்ற அணியை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உருவாக்கியது.
இதன்மூலம், சொந்த நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தங்கியுள்ள அகதிகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த அணி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் நிர்வகிக்கப்படுகிறது. அகதிகள் ஒலிம்பிக் அணியில் 29 வீரர்-வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.