காணொலிப் பதிவு: வாடகை ரவுடிகள்: ஒருமணி நேர இடைவெளியில் இரு வன்முறைச்சம்பவங்கள்

யாழ் நகரம் வன்முறை மிகுந்த நகரமாக மாறி வருகின்றது. வாடகைக் கொலையாளிகள் வாடகை ரவுடிகளின் கூடாரமாக யாழ்ப்பாணம் மாறிவிட்டது. யூலை 22 இரவு ஒருமணி நேர வித்தியாசத்தில் இரண்டு வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெற்றது. யாழ் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் முதலாவது தாக்குதல் இடம்பெற்று குறுகிய நேர இடைவெளியில் மற்றுமொரு சம்பவம் யாழ் அராலியில் இடம்பெற்றுள்ளது. அண்மைக்காலமாக இடம்பெறும் சம்பவங்கள் சில தாக்குதல் நடத்தியவர்களுக்கும் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கும் இடையே தனிப்பட்ட முரண்பாடுகள் இல்லாத நிலையில் கூலிக்கு அமர்த்தப்பட்டு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. சமூகக் கட்டுப்பாடுகள் முற்று முழுதாக செயலிழந்துள்ள நிலையில் யாழ் தமிழ் சமூகம் உள்ளுணர்வு பிறள்வுநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கு இரவு ஒன்பது மணியளவில் கடையயை மூடிவிட்டுச் சென்றதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் இரு வாள்களுடன் வந்தவர்கள் பெற்றோல் குண்டுகளை எறிந்து புடவைக் கடைக்கு தீ மூட்டி உள்ளனர். இந்த தீவைப்புத் தாக்குதல் சம்பவம் ஒளிப்பதிவாகி உள்ளது. இந்த ஒளிப்பதிவில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதலில் ஈடுபட்டது பதிவாகி உள்ளது.

இத்தாக்குதல் பற்றி தெரிவித்த கடையின் உரிமையாளர் தானும் தனது கணவரும் இரு மாதங்களுக்கு முன்னரேயே கடையை ஆரம்பித்ததாகவும் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் தலைநகர் கொழும்பில் இருந்தும் தருவிக்கப்பட்ட ஆடைகள் கடையில் இருந்தாகவும் தெரிவித்தார். இத்தீவைப்புச் சம்பவத்தால் தனக்கு அறுபது லட்சம் ரூபாய்களுக்கு மோலாக நட்டம் ஏற்பட்டதையும் கண்ணீர்மல்கத் தெரிவித்தார்.

தாக்குதலை நடத்தியவர்கள் தங்கள் பொக்கற்றினுள் இருந்து எடுத்த பெற்றோல் போத்தல்களை எறிந்து கடையின் கண்ணாடிகளை அடித்து நொருக்கி தீ வைத்துள்ளனர். இச்சம்பவங்கள் ஒளிப்பதிவாகி உள்ளது. யாழ் பொலிஸ்மா அதிபருக்கு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ள கடையின் உரிமையாளர் பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு தங்களுக்கு தீர்வு பெற்றுத்தர வேண்டும் என்று கண்ணீரோடு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுவிடயமாக கொக்குவிலைச் சேர்ந்தவரும் யாழ் மேயரின் உறவினருமான த சஞ்சீவ்ராஜ் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் தமிழ் அரசியல்வாதிகளும் யாழ் மேயரும் யாழ் நகரில் இடம்பெறும் வன்முறைத் தாக்குதல் சம்பவங்கள் பற்றி மௌனமாக இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து உள்ளதும் இவ்வாறான வாடகை ரவுடிகள் உருவாவதற்குக் காரணம் எனத் தெரிவித்த அவர் அரசியல் வாதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவரான இவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறீதரனின் மகன் யாழ் இந்துக்கலலூரி மாணவனாக இருந்து வன்முறைக் குழுக்களுடன் செயற்பட்டதைச் சுட்டிக்காட்டி அரசியல்வாதிகள் முன்மாதிரியாக நடக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அண்மையில் யாழ் மேயர் மணிவண்ணனின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் ரஜீவன் யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் பிரச்சினையில் வாள்வெட்டில் உட்பட்டு தலை மறைவாக சில நாட்களின் பின் பொலிஸில் சரணடைந்தது தெரிந்ததே.

கொக்குவில்குளப்பிட்டிச் சந்தியில் வைக்கப்பட்ட தீ எரிந்து கொண்டிருக்கின்ற போதே ஒரு மணி நேரத்தில் இரவு பத்து மணியளவில் மோட்டார் சைக்கிளில் யாழ் அராலி வீதியில் உள்ள வீட்டு வளவுக்குள் நுழைந்தவர்கள் வீட்டின் கண்ணாடிகளை அடித்து நொருக்கி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியயை அடித்து நாசம் செய்துள்ளனர். அதன் பின் அதற்கு தீ வைக்கவும் முயன்றுள்ளனர். நித்திரையில் இருந்தவர்கள் விழித்துக்கொண்டு அயலவர்களையும் அழைத்து தாக்குதல் நடத்தியவர்களை விரட்டி அடித்துள்ளனர்.

இச்சம்பவங்கள் வியாபாரப் போட்டி காரணமாகவே இடம்பெற்றிருக்கலாம் என கொக்குவில் குளம்பிட்டிச் சந்தி தாக்குதலுக்கு இலக்காண புடவைக்கடை உரிமையாளர் தெரிவிக்கின்றார். இவ்வாறான தாக்குதல்கள் பல நடைபெற்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன் யாழ் நியூமார்க்கற்றில் தனது கடையயை வாடகைக்கு வழங்கியது தொடர்பில் கடையின் உரிமையாளர் திருநல்வேலியில் இருந்த அவரின் வீட்டில் வைத்து தாக்கப்பட்டு பலத்த வாள் வெட்டுக்கும் இலக்கானார். இது பற்றி சம்பந்தப்பட்ட எழுபதுக்கும் மேல் வயதான உரிமையாளரின் உறவினர் தேசம்நெற்க்கு தகவல் தருகையில் குறித்த கடையை வேறொருவரும் தனக்கு கேட்டிருந்ததாகவும் அவருக்கு கொடுக்க மறுத்து இன்னுமொருவருக்கு கடையை கொடுத்ததாலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடையை தங்களுக்கு வாடகைக்குத் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்தவர் வாடகைக்கு ரவுடிகளை அமர்த்தி இத்தாக்குதலை நடத்தியதாகவே தாங்கள் நம்புவதாக பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர் தெரிவித்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யவில்லை.

வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவ்வாறான வாடகை ரவுடிகளைப் பயன்படுத்தி வருவதாக தெரியவருகின்றது. அரசியல் வாதிகள் பொலிஸார் வெளிநாட்டவர்கள் என்று அனைவரது கரங்களிலும் கறைகள் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து கொண்டு ஊர் சென்றுவரும் சிலர் அங்கு பெண்களை பாலியல் பொருட்களாக பயன்படுத்துவதை தனது ‘ஒற்றைப் பனைமரம்’ படத்தில் இயக்குனர் புதியவன் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *