“காரணமே இல்லாமல் என்னை கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளார்கள்.” – நாடாளுமன்றில் ரிஷாட் பதியுதீன் !

24 மணிநேரமும் மூடிய அறைக்குள் அடைத்து வைத்து மலசலகூடத்துக்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதிப்பதாக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் 102 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“ஜனாதிபதியும் பிரதமரும் இந்தச் சபையில் இருக்கின்றார்கள்.என்னை கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி கைது செய்தார்கள். வெறும் 5 நாட்கள் மாத்திரமே என்னை விசாரணை செய்தார்கள். 102 நாட்கள் என்னை தடுத்துவைத்துள்ளார்கள். 97 நாட்கள் வரையில் அறையில் அடைத்து வைத்துள்ளார்கள். 24 மணி நேரமும் அந்த அறை மூடப்பட்டு, மலசலகூடத்துக்கு மட்டும் என்னை வெளியில் செல்ல அனுமதிக்கிறார்கள்.

இன்றுவரை எந்தவிதமான விசாரணைகளும் இடம்பெறவில்லை. நான் பொய் கூறவில்லை. வேண்டுமென்றால் வந்து பார்க்க முடியும்.

ஜனாதிபதி அவர்களே, இன்னுமொரு விடயம். என்னைக் கைது செய்தபோது, பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் ‘என்னை ஏன் கைது செய்கிறீர்கள்?’ என்று நான் கேட்டபோது, எனது அமைச்சில் பணிபுரிந்த மேலதிக செயலாளர் பாலசுப்பிரமணியத்துடன், ஒன்றரை நிமிடம் தொலைபேசியில் உரையாடியதாக கூறினார்கள். இதனால்தான் என்னை கைது செய்துள்ளதாக கூறினார்கள். வேறு எந்தக் காரணமும் இல்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

ரிஷாட்டின் கருத்திற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பாலசுப்ரமணியம் தற்போது நாட்டில் இல்லையெனவும் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து ரிஷாட் பதியுதீன் எம்.பிக்கு வழங்கப்பட்ட 2 நிமிட கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்து சபாநாயகர் ஒலிவாங்கியை நிறுத்திவிட்டு, நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்தார்.

சிறுமி ஹிஷாளினி மரணம் தொடர்பான வினாக்களுக்கு ரிஷாட் முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் கூட அவர் அது தொடர்பாக பேசியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *