ஆப்கன் மக்கள் எங்களை ஆதரிக்கின்றனர். அதனால், ஐ.நா.வும் எங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று தலிபான்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில், ஐ.நா.வின் நிரந்தரப் பிரதிநிதியாக ஆப்கானிஸ்தான் சார்பில் முஹம்மது சுஹைல் ஷாஹீனை தலிபான்கள் நியமித்தனர். ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க தலிபான்கள் அனுமதி கோரினார். ஆனால், அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதேபோல், ஆப்கனின் முன்னாள் அரசின் ஐ.நா.பிரதிநிதியும் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை.
இந்நிலையில்,முஹம்மது சுஹைல் ஷாஹீன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“காபூல் நிர்வாகம் இப்போது செயல்பாட்டில் இல்லை. இப்போது இங்கே செயல்படுவது இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தானின் ஆட்சி. இந்த ஆட்சி ஓர் அரசாங்கத்துக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளது. இதுதான் ஆப்கன் மக்களின் உண்மையான பிரதிநிதி. அதனால், எங்களுக்கு ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க தகுதி இருக்கிறது. எங்களை ஆப்கன் மக்கள் ஆதரிக்கின்றனர். ஆகையால் ஐ.நா. எங்களை அங்கீகரிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்று உலகம் ஏற்கும் நாடாக ஆப்கனை உருவாக்க தலிபான்கள் விரும்பினர். அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவை உள்ளடக்கிய ஒன்பது பேர் கொண்ட ஐ.நா குழுவுக்கு ஆப்கனின் கோரிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், இந்த முறை அதற்கு எவ்வித தீர்வும் கிட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.