ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களின் வெறுப்பின் வெளிப்பாட்டைத்தான் காலப்போக்கில் ஜனாதிபதி சந்திப்பார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசின் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 13 உறுப்பினர்களைக் கொண்ட செயலணியை நியமித்துள்ளார்.
சிறைத்தண்டனை அனுபவித்த – தமிழ்பேசும் மக்களுக்கு எதிராக இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வரும் ஒருவரை ஜனாதிபதி செயலணியின் தலைவராக எந்தவகையில் ஏற்றுக்கொள்ள முடியும்? 13 உறுப்பினர்களைக் கொண்ட இந்த விசேட ஜனாதிபதி செயலணியில் தமிழ்ப் பிரதிநிதி ஒருவரேனும் நியமிக்கப்படவில்லை. இது ஜனாதிபதியின் திட்டமிட்ட செயலா?
ஆனபடியால் ஜனாதிபதி இவ்விதமான கருமங்களைச் செய்கின்றபோது அவற்றை நாட்டு மக்கள் – விசேடமாக தமிழ்பேசும் மக்கள் – தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கக்கூடாது. அதை அவர்கள் வெறுப்பார்கள். அதுதான் நிலைமை” – என்றார்.