யாழில் செயற்படும் சிறுவர் வாள்வெட்டுக்குழு – 10 சிறுவர்கள் கைது !

யாழ்ப்பாணத்தில் சிறுவர்களால் நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 10 சிறுவர்கள் யாழ்.குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நாவாந்துறைப் பகுதியில் அண்மையில் 14 வயது சிறுவன் மீது 10 பேர் கொண்ட அணி ஒன்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டது. அதில் அச்சிறுவன் காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இது தொடர்பில் யாழ். காவல்நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் சம்பவத்துடன் தொடர்புபட்டனர் என்று முறையிடப்பட்ட 10 பேரையும் நேற்றுக் கைதுசெய்தனர். இதில் கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் சிறுவர்கள் என்ற அதிர்ச்சிச் செய்தியை காவல்துறையினர் வெளியிட்டதுடன் அவர்கள் அனைவரும 14 தொடக்கம் 17 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் யாழ். நகரம், நாவாந்துறை, அத்தியடி, நல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து வாள், கைக்கோடாரி என்பனவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டன எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழில் இளைஞர்களின் அடாவடி மற்றும் வாள்வெட்டு வன்முறைகள் கட்டுப்பாடு இன்றி நடைபெற்றுவரும் நிலையில் சிறுவர்கள் கூரிய ஆயுதங்களை உடமையில் வைத்து குழுவாக இணைந்து இப்படிப்பட்ட வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டமையானது காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கைது நடவடிக்கைகள் யாழ். குற்றத் தடுப்புப் பிரிவு பதில் பொறுப்பதிகாரி குமாரபேலி தலைமையில் காவல்துறை உத்தியோகத்தர்களான விஜயகாந்த், கபில்தாஸ், செனரத்னா, கஜன் போன்றவர்களால் மேற்கொள்ளப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட சிறுவர்கள் அனைவரும் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *