“ஒரு கோடி ரூபாவில் அரைவாசியை செலவழித்துக்கொண்டு மிகுதியை தமது பொக்கட்டுக்குள் போடுகிறார்கள்.” – யாழ்.மாநகர சபை தொடர்பில் கஜேந்திரகுமார் விசனம் !

யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடப்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது யாழ் மாநகர சபை பாதீடு தொடர்பான வாக்கெடுப்பு தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

அவர் மெலும் தெரிவிக்கையில்,

“எங்களுடைய அமைப்பு குறித்த பாதீட்டை எதிர்க்கும். அது அனைவருக்கும் தெரிந்த விடயம். புதிய விடயம் அல்ல. ஆனால் எங்களைப்பொறுத்தவரையில் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது. அது மிக விரைவில் வெளிவரும்.

ஊழல் செய்து தனிபர் உழைப்பதற்கான ஓர் இடமாக மாறியுள்ளது. இதனை மக்கள் மிக விரைவிலே உணர தொடங்குவார்கள். அந்த கலாச்சாரத்தை வைத்துக்கொண்டு ஒருநாளும் முடிவுக்கு வர முடியாது. ஒரு கோடி ரூபாவில் அரைவாசியை செலவழித்துக்கொண்டு மிகுதியை தமது பொக்கட்டுக்குள் போடும் நிலைதான் இருக்கின்றது என்றால் அது ஒருபோதும் மக்களிற்கு சார்பான விடயமாக மாறப்போவதில்லை.

அந்த மாநகர சபை ஊடாக எத்தனையோ விடயங்களை சரிப்படுத்தியிருக்கலாம். இன்று உலக வங்கி கோடி டொலர் கணக்கில் உதவிகளை செய்துவருகின்ற நிலையில், அந்த உதவிகளை சிறிலங்கா அரசும் ஏனைய தரப்புக்களும் ஊழல் மற்றும் வேறு காரணங்களிற்காகவும் சரியான ஆய்வுகளை செய்யாமல் இருக்கின்ற இடத்தில், மாநகர சபை அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி நவீன நகரமாக மாற்றியமைப்பதற்கு இந்த நிதிகளை பயன்படுத்துவதற்கான அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடியதாக இருந்திருக்க வேண்டும்.

மாநகர சபை எல்லைக்குள் இருக்கின்ற மத்திய அரசு செய்யக்கூடிய வேலைகளைக்கூட சரியான முறையில் நிபுணத்துவம் இன்றி ஆய்வுகள் செய்யாமல் வெறுமனே கண் துடைப்புக்காக செய்ததாக இல்லாமல், உண்மையி்ல் ஆக்கபூர்வமான அபிவிருத்தியாக மாற்றியமைக்கக்கூடிய கண்காணிப்பாக செயற்பட்டிருக்க வேண்டும்.

இன்று மழைவந்தால் கோடிக்கணக்கில் அதனை சீர் செய்வதற்காக நிதியை செலவு செய்கின்றார்கள். ஆனால் வெள்ளம் அப்படியே நிக்கின்றது. ஏனெனில், ஏற்றம் தாழ்வு தொடர்பில் எந்தவித கணிப்பும் இல்லாது, வெறுமனே வீதியில் வாய்க்காலை கட்டியிருக்கின்றார்கள்.

இவ்வாறான மிக மோசமான மோசடிகள் எல்லாமே , மாநகர சபைக்குள் மாத்திரமல்ல, உள்ளுராட்சி சபைகளிற்குள்ளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான விடயங்களில் தேசிய சிந்தனை இல்லாமல், வெறுமனே உழைக்கின்ற சிந்தனையோடு செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *