மியன்மாரில் சுரங்கத்தில் நிலச்சரிவு – 70க்கும் அதிகமானோர் மாயம் !

மியன்மார் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கச்சின் மாகாணம் ஹபகந்த் என்ற இடத்தில் பச்சை மாணிக்க கற்கள் வெட்டி எடுக்கும் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதி சீனா எல்லை அருகே அமைந்துள்ளது. சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று அதிகாலை சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. அவர்கள் மீது மண் சரிந்து அமுக்கியது.
இந்த நிலச்சரிவில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். பெருமளவில் மணல் சரிந்ததால் அவர்களால் வெளியே வர முடியவில்லை. நிலச்சரிவு குறித்து அறிந்ததும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சரிந்து விழுந்த மணலை அப்புறப்படுத்தி தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இதில் 25 தொழிலாளர்களை காயங்களுடன் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார்.
நிலச்சரிவில் 70 முதல் 100 பேர் வரை சிக்கி உள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். அவர்களது கதி என்ன? என்பது தெரிய வில்லை. அதிகளவில் மண் சரிந்து நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் விரைவாக நடந்து வருகிறது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *