கொழும் பில் நடைபெற்ற சார்க் நாடுகளின் நிலையியற் குழுவின் 36 ஆவது அமர்வின்போது பயங்கரவாதம் மற்றும் நிதிநெருக்கடிக்கு எதிராகப்போராடுதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித ஹோகனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்க் நாடுகளின் நிலையியற் குழுவின் 36 ஆவது அமர்வு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; சார்க் நாடுகளிடையேயான பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பு தொடர்பாக சார்க் நிலையியல் சபையில் விரிவாக கலந்துரையாடப்பட்டு பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பினை முன்னேற்றுவதற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் சப்ராவினுடைய நிர்வாகப்படுத்தல் மற்றும் அமுலாக்கல் தொடர்பாகவும் சார்க் வர்த்தக உடன்படிக்கை தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
தெற்காசிய சுதந்திர வர்த்தக வலயம் தொடர்பான உடன்படிக்கையை ஆப்கானிஸ்தான் ஏற்றுக்கொள்ளுதல் தொடர்பான நிலைப்பாட்டை உறுதிப்படுத்தல், தெற்காசிய பிராந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பினை ஸ்தாபிக்கும் உடன்படிக்கை தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், சார்க் அபிவிருத்தி நிதி சார்க் உணவு வங்கியின் ஸ்தாபிதம் தொடர்பான உடன்படிக்கை, எய்ட்ஸுக்கான சார்க் நாடுகளின் நல்லெண்ணத் தூதர்களின் செயற்பாடுகள், சார்க் சமூகசாசனம் தொடர் ஆகியவை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், தீவிரவாதத்தை அழித்தல் தொடர்பாக சார்க் நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, மற்றும் குற்றச்செயல்கள் தடுப்பு மீதான பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பாகவும் இங்கு விமர்சிக்கப்பட்டது.
பிராந்திய அமைதிக்கும் சுபிட்சத்துக்கும் தாக்கம் விளைவிக்கும் பயங்கரவாதத்தினால் ஏற்படும் விளைவுகளுக்காக சார்க் பிரதிநிதிகள் தமது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொண்டனர்.
அதேவேளை, தெற்காசிய பல்கலைக்கழகத்தினை ஸ்தாபித்தல் தொடர்பாக பேராசிரியர் சாக்கதாவின் அறிவுரைகளுடன் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டது. இப் பல்கலைக்கழகத்தை ஸ்தாபித்தல் சார்க் பிராந்திய நாடுகளின் பாரிய அபிவிருத்தியாக அமையும்.
மேலும் சார்க் நாடுகளிலுள்ள தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடுதல் மற்றும் நிதிநெருக்கடி தொடர்பான பரிந்துரைகள் அமைச்சர்களிடம் சமர்ப்பிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது