“தமிழர்களுக்கு தேவையானது அரசியல் தீர்வில்லை.” – அமைச்சர் பஸில்

“அரசியல் தீர்வு மாத்திரம் தமிழ் மக்களின் பிரச்சினை அல்ல. அதைவிட அவர்களின் அத்தியாவசிய தேவைகளே முக்கியம்.” என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

அரச தலைவரின் கொள்கைப் பிரகடன உரையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள் காரசாரமாக விமர்சித்துள்ள நிலையில், கூட்டமைப்புடன் பேச்சு முன்னெடுக்கப்படுமா? என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர்,

திறந்த மனதுடன் தமிழர் தரப்புடன் பேச்சு நடத்த அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தயார் நிலையில் உள்ளது. அந்தப் பேச்சு விரைவில் ஆரம்பிக்கப்படும்.

அரசியல் தீர்வு மாத்திரம் தமிழ் மக்களின் பிரச்சினை அல்ல. அதைவிட அவர்களின் அத்தியாவசிய தேவைகளே முக்கியம். எனவே, முதலில் அத்தியாவசிய தேவைகளுக்கு, அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். இதுவே அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் திட்டமாக உள்ளது.

இவற்றுக்கு முதலில் தீர்வு கண்டால் அரசியல் பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காணமுடியும். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட வேண்டும்.

நாட்டைப் பிளவுபடுத்தி இனவாத ரீதியில் செயற்பட அவர்கள் முற்படக்கூடாது. நாட்டை முன்நகர்த்தும் செயற்பாடுகளுக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” – என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *