உலக வெப்பநிலை அதிகரிப்பானது பருவகாலம் ஆரம்பமாவதை 515 நாட்கள் வரை தாமதப்படுத்தும் என்றும் தெற்காசியாவில் மழைவீழ்ச்சியை கணிசமான அளவுக்கு குறைத்து விடும் எனவும் அண்மைய ஆய்வொன்று தெரிவிக்கின்றது. அடுத்த நூற்றாண்டுக்குள் இது இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. புவிவெப்பநிலை அதிகரிப்பானது பருவகால சுழற்சியை கிழக்குநோக்கி நகர்த்தும் சாத்தியம் இருப்பதாகவும் இதனால் இந்து சமுத்திரத்திற்கு மேலாகவும் பங்களாதேஷ், மியான்மாரிலும் அதிகளவு மழை வீழ்ச்சி ஏற்படும் என்றும் ஆனால், பாகிஸ்தான் ,இந்தியா, நேபாளத்தில் மழை வீழ்ச்சி குறைவாகி இருக்கும் என்றும் ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் மேற்கு இந்தியாவின் கரையோரப்பகுதிகள் இலங்கை மியான்மாரில் மழைக்காலம் நீண்ட நாட்களுக்கு தாமதமாகுமெனவும் கடுமையான வெள்ள அபாயம் ஏற்படும் என்றும், மழைவீழ்ச்சியில் கணிசமான அதிகரிப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயம், மனிதர்களின் சுகாதாரம் பிராந்தியத்தின் பொருளாதாரம் என்பவற்றில் பாரிய தாக்கம் ஏற்படும் என்று இந்த ஆய்வறிக்கையை தயாரித்த நொயா டிவன்யா எச்சரித்துள்ளார்.
“இந்த பருவகாலங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயே உலகின் அரைவாசி மக்கள் தொகையினர் வாழ்கின்றனர். சாதாரண பருவகால முறைமையில் இலேசான மாற்றம் ஏற்பட்டாலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று பேர்டியூ பல்கலைக்கழகத்தின் காலநிலைமாற்ற ஆய்வு நிலையத்தின் இடைக்காலப்பணிப்பாளரான நொயாடிவன்யா கூறியுள்ளார்.
பருவகால மழைவீழ்ச்சி தாமதமடைவது விவசாய உற்பத்தி, நீர்கிடைப்பனவு, நீர்மின்சக்தி உற்பத்தி என்பனவற்றை கணிசமான அளவுக்கு பாதிக்கச்செய்யும். அத்துடன் மழைவீழ்ச்சி குறைவாகவுள்ள பகுதிகளில் கடும் உஷ்ணமான நிலை காணப்படும் என்று பேர்டியூ பல்கலைக்கழக மாணவன் மோதாகிம் அஷ்பாக் கூறியுள்ளார்.