கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீது தாக்குதல் நடாத்த வந்த விமானம் தரையில் உள்ள படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது. அவ்விமானத்தை செலுத்திவந்த புலிகள் இயக்க தற்கொலைதாரி ரூபன் நீர்கொழும்பு மஜித்திரேட் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.
30 வயது முருகப்பிள்ளை சிவரூபன் என அவரது உறவினரும் முன்னாள் புலிகளியக்க உறுப்பினருமான 29 வயது இளைஞர் ஒருவரால் நீர்கொழும்பு பிரேத அறையில் வைத்து அடையாளம் காட்டப்பட்டுள்ளார். சாட்சியின் தகவல்களின் படி முருகுப்பிள்ளை சிவரூபன் இடைக்காடு மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரம் வரைப் படித்தவர் எனவும் பின்னர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார் எனவும் தெரிகிறது. அவரது தகப்பனார் புற்றுநோயினால் பாதிப்புற்று வன்னியின் கிழக்குப்பகுதியில் வாழ்வதாகவும் சகோதரி ஒருவர் ஜேர்மன் நாட்டில் வாழ்வதாகவும் மேலும் தெரிய வருகின்றது.