முதல் காதல் தற்கொலையில்! எஞ்சிய வாழ்க்கை குற்ற உணர்வில்!! வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும்!!! – பாகம் 32

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 32 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 05 மார்ச் 2022). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 32:

தேசம்: வணக்கம். நீண்ட உரையாடலில் இன்னுமொரு படி வந்து நிற்கிறோம். எண்பதுகளில் உங்களுடைய அரசியல் பயணத்தை நீங்கள் ஆரம்பித்திருந்தீர்கள். அந்த அரசியல் பயணம் ஒரு நீண்ட பயணம். அதற்கு பிறகு நாங்கள் 91 ஆம் ஆண்டு வரை இலங்கை இந்தியாவில் உங்களுடைய அரசியல் பங்களிப்பை பற்றி நாங்கள் கதைத்திருந்தோம். அதற்கு பிறகு நீங்கள் 92ஆம் ஆண்டு பாரிசுக்கு இடம்பெயர்ந்து பாரிசில் நடந்த அரசியல் இலக்கிய சூழல் பற்றி கதைத்துக் கொண்டு இருக்கிறோம். அதற்கு முதல் உங்களுடைய உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியும் கதைத்திருந்தோம்.

நீண்ட பயணம். கடினமான பயணம். அதில் நீங்கள் இழந்தது, உங்களுடைய வலிகளைத் தொடர்ந்து நீங்கள் ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொண்டது வரைக்கும் கதைத்திருக்கிறோம். இதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. பலத்த வலிகளுக்கு மத்தியிலும் சில விஷயங்களை உங்களால் சொல்லக் கூடியதாக இருந்தது. சில விடயங்கள் சொல்வதற்கு கஷ்டமான விடயங்களும் நடந்திருக்கு. தனிப்பட்ட முறையில் அது உங்களுக்கு நிறைய பாதிப்புகளையும் கொடுத்திருக்கு. அந்த வகையில் நாங்கள் மீளவும் உங்களோட அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப காலத்துக்கு ஒருக்காப் போயிட்டு வரலாம் என்று யோசித்தேன். அதுல பல விடயங்களை நீங்கள் கதைத்திருந்தீர்கள்.

அதில் உங்களுடைய அரசியல் ஆரம்பத்துக்கு முதல், அரசியலில் நீங்கள் முழுமையாக ஈடுபடுவதற்கு முதல், உங்களுடைய இளமை பிராயத்தில் இடம்பெற்ற சம்பவங்களைப் பற்றி கதைத்தோம். அதில் உங்களுக்கு ஏற்பட்ட உறவு சம்பந்தமாகவும் கதைத்திருந்தோம். நான் குறிப்பாக கதைப்பது களுதாவளை கிராமத்தில் இளமைக்காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட ஒரு தோழியினுடைய உறவு பற்றி – லீலா என்பவருடைய உறவு பற்றி. உங்களுக்கு கதைப்பதற்கு சிலநேரம் கஷ்டமாக இருக்கலாம். அவருடைய முடிவு கஷ்டமாக இருக்கலாம். இருந்தாலும் நான் நினைக்கிறேன் இந்த இடத்தில் கதைத்துச் செல்வது நல்லம் என்று. அதைப் பற்றி உங்களுக்கு சொல்ல முடிந்தால் நல்லம்…

அசோக்: இந்த சம்பவத்தை எப்படி தொடங்குவது, கதைப்பது என்று எனக்கு தெரியல்ல. இந்த சம்பவம் நடந்து 40 வருடங்களாகி விட்டது.

80 ம் ஆண்டு நடந்தது… நாம் நினைப்பது, காலம் வலிகளையும் குற்ற உணர்வையும் போக்கி விடும் என்று. அப்படி நடக்கிறது இல்லை. அடிமனதில் படிஞ்சி போய் இருக்கும். நினைவுக்கு வரும் போதெல்லாம் அதன் வேதனை கடுமையானது. ஆனா மனம் விட்டு இப்படி உரையாடுவது குற்றஉணர்வை, வலியை குறைக்க உதவும் என நினைக்கிறன்.

அந்தக் காலகட்டம் எண்பதுகளில் தெரியும்தானே ஒரு இலக்கிய வட்டம் நண்பர்கள் உலகம். இளந்தளிர் வாசகர் வட்டத்தை உருவாக்கிக் செயற்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. எங்களுடைய முழுமையான ஈடுபாடு இலக்கிய வாசிப்பு தான். வாசிகசாலை, வாசிப்பு, படிப்பு. அரசியல் ஆரம்பம் அப்பதான். நாங்கள் இயக்கத்துக்கு போகவில்லை அப்போ. முழுக்க முழுக்க இலக்கிய உலகம் தான்.

அந்த நேரம் எனக்கு நல்ல சிநேகையாக, தோழியாக, என் அன்புக்குரியவங்களாக இருந்தவங்க லீலா. இளமையிருந்தே நாங்க பழக்கம். வாழ்க்கையின் முதல் காதல்.

தேசம்: உங்களுடைய கிராமத்தைச் சேர்ந்தவர் அவர் உங்களுடைய பேனா நண்பி அல்ல…

அசோக்: பேனா நண்பி இல்லை, ஒரே கிராமத்தைச் சேர்ந்தவங்க நாங்க. எங்களுடைய இளந்தளிர் வாசகர் வட்ட நண்பர்கள். எல்லாரும் ஒரே நண்பர்கள் நாங்கள். அதுல லீலாவும் ஒருவர். இந்த நண்பர்களும் தோழர்களும்தான் காலப் போக்கில் என்னோடு புளொட்டிக்கு வந்தவங்க. இது பற்றி முன்னமே கதைத்திருக்கிறன்.

லீலா மிக மென்மையானவர். என்னுடைய நண்பர்கள் எல்லோருக்கும் நெருக்கமாவங்க. ஒரே கிராமம் என்றால் தெரியுங்தானே, ஒவ்வொரு நாளும் சந்திப்பம். கதைப்பம். எங்கட காதல் எங்க நண்பர்கள் வட்டத்தில இயல்பான விசியம். லீலாவுக்கு அப்பா இல்லை. அம்மா வேறு திருமணம் செய்து இன்னொரு ஊரில இருந்தாங்க. லீலா அம்மம்மாவோட இருந்தாங்க. மாமா இரண்டு பேர், மாமி என மிக அன்பான குடும்பம். அருமையான ஆட்கள். எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. லீலாவை மிக அன்பாக பாத்தாங்க.

திடீரென ஒருநாள் விவசாயத்திற்கு பயன்படுத்துற கிருமி நாசினியை லீலா குடிச்சிட்டாங்க. உடனேயே வீட்டிலிருந்து ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிட்டாங்க. என்ட நண்பனும் அவரின்ற அம்மாவும்தான் தான் கொண்டு போனவங்க. என்ட நண்பன் என்றது லீலாவுக்கு சகோதர முறையானவர். யோகன் சீவரெத்தினம் என்றுசொல்லி. என்னோடு பிறகு இயக்கத்திக்கு வந்தவர். அவங்க கொண்டு போகும் போது சொல்லியிருக்கிறார் என்னை காப்பாத்துங்க, காப்பாத்துங்க என்று. பெரிசாக தாக்கம் கொடுக்கல்ல. பேசும் நிலையிலதான் இருந்திருக்காங்க. ஹாஸ்பிடல் கொண்டு போகும் வரைக்கும் அவர் பேசிக் கொண்டுதான் இருந்திருக்கிறார். அப்போ ஹாஸ்பிடல் போய் சிகிச்சை கொடுத்த பிறகு நோர்மலா இருந்திருக்காங்க. ஆபத்தைத் தாண்டிவிட்டார் என்று டாக்டர் சொல்லி இருக்கிறார். “நான் செத்து இருந்தா எப்படியெல்லாம் கதைச்சிருப்பாங்க” என்றெல்லாம் லீலா சொல்லி இருக்காங்க. அந்தளவிற்கு சுகமாக இருந்திருக்கிறார். அந்த மருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு தான் வேலை செய்யுமாம். அதற்குப்பிறகு தீடிரென மயக்கம் ஏற்பட்டு இறந்திட்டாங்க.

தேசம்: சிலவேளை அந்த நேரம் மருத்துவ வசதிகளும் அவ்வளவு வளர்ந்திருக்கவில்லை. இன்றைய சூழலில் என்றால் சிலவேளை காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

அசோக்: இதற்கு ஒரு வருஷத்துக்கு முதல் ஸ்லீப்பிங் டேப்லெட் சாப்பிட்டு பிரச்சனையாகி விட்டது. யாருக்கும் சொல்லவில்லை. நித்திரை மயக்கமாக வரும் போதுதான் சொல்லி இருக்கிறா. இப்படி நித்திரை குளிசை பாவித்தேன் என்று. பிறகு என்னுடைய நண்பர்கள் எல்லாம் சேர்ந்து முதல் உதவி செய்து காப்பாற்றீனாங்க. அதற்கும் காரணம் கேட்டும் அவங்க. சொல்லவில்லை. அவருக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருந்ததாக தெரியல்ல. அடுத்தது கதைத்தால்தானே தெரியவரும். குடும்பத்தால் எந்தவொரு நெருக்கடியும் இல்லை. அருமையான குடும்பம்.

தேசம்: ஏன் அந்த முடிவுக்கு அவா போறா…

அசோக்: நண்பர்கள் அபிப்பிராயம் என்ன என்றால் நான் ஒரு காரணமாக இருக்கலாம். முதலும் நித்திரை குளிசை போட்டதற்கான காரணம் சொல்லவில்லை. என்னைவிட என்னுடைய நண்பர்கள் மிக நெருக்கம் அவங்களிட்டையும் காரணம் சொல்ல வில்லை. நானும் நினைக்கிறன் நான் தான் காரணமாக இருக்கலாம் என்று. அவங்களின்ற வீட்டைப் பொறுத்தவரை அம்மம்மா, மாமி, மாமா ஆட்கள் மிக அன்பானவங்க. வீட்டில்பிரச்சனை இருக்க சந்தர்ப்பம் இல்லை.

தேசம்: 80 கால கட்டங்களில் பொதுவாக தற்கொலையின் உச்சியில் இருந்த நாடுகளில் இலங்கையும் ஒன்று. அதுலயும் குறிப்பாக விவசாயத்திற்கு பாவிக்கிற கிருமி நாசினியை குடித்துத்தான் நிறைய பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். அதற்கு பிறகு தான் நான் நினைக்கிறேன் உலகம் முழுதுமே சட்டமூலம் ஒன்று வந்தது கிருமிநாசினி யின் பாதுகாப்பு பற்றி. இதனைப் பாவிப்பதை, கட்டுப்படுத்த வேண்டுமென்ற விஷயங்களெல்லாம் அதற்குப்பிறகுதான் கூடுதலாக பேசப்பட்டு இன்று அது நிறைய குறைந்திருக்கின்றது. ஆனால் இன்றும் இலங்கையில் நிறைய தற்கொலைகள் இடம்பெறுகிறது.

தமிழர் மத்தியில் இந்த தற்கொலை வீதம் ஒப்பீட்டளவில் கூடுதலாக தான் இருக்குது. பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அது ஏன் அவர்கள் எடுத்த உடன்… சில ஆய்வுகள் தெரிவிக்கிறது தற்கொலை பரம்பரையலகுடன் சம்பந்தப்பட்டதாகவும் சொல்லப்படுது. தற்கொலைக்கான எண்ணம் வரும்போது தற்கொலைக்கான துணை காரணிகளும் சேர்ந்து கொள்ளுது. அதுல தான் இந்த அரலி விதை அரைக்கிறதோ அல்லது இதுகள் வந்து இலகுவாக கிடைக்கக்கூடியதாக இருக்குது. அது உடனே வர தூண்டுதல் தானே

லீலாவினுடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள் உங்களுடைய நண்பர்கள் என்று நினைக்கிறேன் அப்படியா…

அசோக்: சகோதரர்கள் எல்லோரும் நல்ல நண்பர்கள் எல்லாம் ஒரே ஊர் ஆக்கள் தானே. இன்றைக்கும் என் நண்பர்கள் அவர்கள்.

தேசம்: எல்லோரும் ஏதோ ஒரு வகையில் உறவுக்காரர் உங்களுக்கு…

அசோக்: ஓம். சின்னம்மா, பெரியம்மா பிள்ளைகள். எல்லாம் என்னுடைய தோழர்கள். இயக்கத்துக்கு என்னுடன் வந்தவர்கள். ஹாஸ்பிடலுக்கு கொண்டு போனது யோகன் தான். யோகன் என்றால் சீவரத்தினம் என்று சொல்லி உங்களுக்கு தெரியும்.

தேசம்: அவருடைய பெயர் தான் உங்களுக்கு வைத்திருக்கிறீர்களா – புனைப்பெயராக?

அசோக்: இல்லை இல்லை என்னுடைய பெயரும் யோகன், அவருடைய பெயரும் யோகன். என்னைவிட வயது குறைவு அவர்.

தேசம்: அவரோட இப்பவும் உங்களுக்கு நல்ல உறவு இருக்குதா…

அசோக்: ஓம் என்னுடைய பிரண்ட் நல்ல தோழர். பிறகு இயக்கத்துக்கு எங்களோடு வந்த தோழர். மச்சான் முறையானவர். சொந்தங்கள் தானே.

தேசம்: அவருடைய இந்த மரணத்துக்கு இந்த நிலைப்பாட்டுக்கு என்ன காரணம்? நீங்கள் வேறு ஒரு உறவுக்குள்ள போயிட்டீங்க என்று நினைக்கிறாவா? அல்லது …

அசோக்: அந்த நேரம் நிறைய பென் பிரண்ட்ஸ் இருந்தது தானே. அந்தக் காலம் பேனா நட்பு உலகம் தானே. 80 ஏப்ரல் தான் இந்த மரணம் நடக்குது. நண்பர்களுடைய அபிப்ராயம் என்ன என்று கேட்டால் என் பேனா நட்புக்கள் தொடர்பான சந்தேகம் இருக்கலாம் என்று. ஏனென்றால் வேற நெருக்கடி அவங்களுக்கு இல்லை. தற்கொலை செய்வதற்கான புறச்சூழல் அவங்களுக்கு வேறு இல்லை. பேசியிருந்தால் இருந்தால் சந்தேகத்தை போக்கி செய்து இருக்கலாம். என்னோட பேசாவிட்டாலும் பரவாயில்லை, நண்பர்களோடு பேசி இருக்கலாம். செய்யவில்லை. அவரோடு மிக நெருக்கமான நண்பர்கள் இருக்கிறார்கள். கடைசியில அவங்களோடயும் கதைக்கவில்லை.

தேசம்: இன்றைக்கும் பார்த்தீர்களென்றால் குடும்பங்களில் நடக்கின்ற நிறைய பிரச்சனைகளுக்கு தற்கொலைகளுக்கு அதீத அன்பு என்று சொல்வதா அல்லது பொசசிவ்னஸ் அது அவர்களை ஏதோ ஒருவகையில் ஒரு பாதுகாப்பு இன்மை நிலவுவதாக ஒரு எண்ணத்தை கொடுக்கும். அது கன பேரை இப்படியான சம்பவங்களுக்கு தூண்டி இருக்கு. அது பல்வேறு காரணங்களும் இருக்கு. சிலபேருக்கு இயல்பாகவே தற்கொலைக்கான காரணிகள் அவர்களுடைய பரம்பரை அலகில் இருக்கும். இவ்வாறு தற்கொலைக்கான காரணங்கள் பல. அதுல எது இந்த முடிவுக்கு இட்டுச் செல்கிறது…

அசோக்: என் மேல சந்தேகம் வந்திருக்கலாம். பேனா நட்புகள் அது இதுவென்று. மனதுக்குள்ளே அதைப் பற்றிய சந்தேகங்கள் இருந்திருக்கலாம். உண்மையிலேயே எனக்கு வேதனையான வலியான விசியம் என்னவென்றால் பிரச்சனையை என்னிடம் கதைத்திருக்கலாம். அல்லது என் நண்பர்களிடம் கதைச்சிருக்கலாம். நினைக்கும்போதெல்லாம் பெரிய வலியாக இருக்கும். பெரியகுற்ற உணர்வாக இருக்கும்.

தேசம்: உண்மையிலேயே கன விடயங்களில் இந்த விடை தெரியாத கேள்விகள் என்று பட்டியலுக்குள் தான் இது எல்லாத்தையும் நாங்கள் போட வேண்டும். ஏனென்றால் உள்ளுணர்வு ரீதியாக என்னத்தை அவர் யோசித்தார் என்று எங்களுக்கும் தெரியாது.

அசோக்: நிறைய பேனா நண்பர்கள் இருந்தபடியால் அந்த சந்தேகங்கள் வந்து இருக்கலாம். என் நண்பர்கள் அபிப்பிராயம். செல்வியின் நட்பு காரணமாக இருக்கலாம் என்று. ஆனா அந்த நேரத்தில செல்வி எனக்கு பென் பிரண்ட்தான். லீலா இறந்ததற்கு பின்னர்தான் 83ல்தான் செல்வியோடு எனக்கு உறவு வருகிறது. அவங்க என்னுடன், என்ட நண்பர்களுடன் பிரச்சனையை கதைத்திருக்கலாம்.

பெரிய மன வருத்தம் என்ன என்று கேட்டால் மிக நெருக்கமான நண்பர்களிடம் கூட இதைப்பற்றி கதைக்கவில்லை. என்னுடன் இப்பவும் கதைப்பார்கள் நண்பர்கள். மிக நெருக்கமான நண்பர்கள் அவர்கள். என்னை விட மிக நெருக்கமாக லீலாவோடு இருந்த நண்பர்கள் அவங்க. அவங்க தற்கொலை பண்ணிக் கொள்வதற்கு முதல் நாள் நானும் ரவியும் சந்திக்கிறோம் லைப்ரரியில் அவங்களை.

தேசம்: அதுல நீங்கள் ஒரு மாற்றத்தையும் கவனிக்கல…

அசோக்: இல்லை இல்லை. வழமைபோலத்தான் இருந்தாங்க.

தேசம்: அதற்குப் பிறகு அவருடைய இறுதி நிகழ்வுகள் சம்பந்தமாக எப்படி அது உங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது…

அசோக்: அரசரெத்தினம் என்று சொல்லி. நாங்க அரசன் என்கிறது. யோகன் சீவரெத்தினத்தின் அண்ணா. எனக்கு மச்சான் முறையானவர். என்னோடு மிக அன்பானவர். என் கிராமத்தைப் பற்றி சொல்லும் போது இவரைப்பற்றி சொல்லி இருக்கிறன். TULF க்கு எங்க ஊரில் முக்கியமான ஆளாக இருந்தவர். தமிழ் இளைஞர் பேரவையிலும் இருந்தவர். 82இல் சிறைக்கு போயிட்டு வரும்போது கடுமையான பொலீஸ் நெருக்கடியில் கூட என்னை தோளில் வைத்துக்கொண்டு எங்கட கிராமத்தின் வீதியெல்லாம் ஊர்வலமாக கொண்டு சென்றவர். லீலாவின் அண்ணா முறையானவர். இறுதி நிகழ்வுக்கு வரும்படி கூப்பிட்டார். நண்பர்களும் கூப்பிட்டாங்க. அப்ப எனக்கு எல்லாமே இருண்டு போய் இருந்தது. எதையும் யோசிக்க முடியல்ல. கடும் வேதனையாக இருந்தது. போக விரும்பல்ல.

பிறகு கொஞ்ச காலத்துக்குப் பிறகு லீலாவின் மூத்த மாமா கேட்டாங்க. இளைய மாமாவுக்கு என் மீது கோபம் இருந்தது. அவர் என்னோடு கதைப்பதை விட்டு விட்டார். இப்ப யோசிக்கும்போது நான் போய் இருக்க வேண்டும். அந்த குற்ற உணர்வு இருக்கிறது.

அன்றைய நண்பர்கள் பலர் நாங்க இன்றைக்கும் நண்பர்களாக தோழர்களாக இருக்கிறம். பழைய நினைவுகளை கதைக்கும்போதெல்லாம் லீலாவின் நினைவுகளும் வரும். அப்ப கடும் வேதனையாக வலியாக இருக்கும். உறவுகளுக்கும், நேசிப்புக்களுக்கும் நேர்மை அவசியம். அதில் நான் தவறிழைத்துவிட்டன் என்றுதான் நினைக்கிறன்.

தேசம்: எண்பது காலகட்டங்களில் அது முக்கியமானது. விவசாய கிருமி நாசினிகளை குடிக்கிறது. அரளி விதை சாப்பிடுவது சாதாரண நிகழ்வாக தான் இருந்தது. இப்ப அந்த வகையில் ஏற்படும் மரணங்கள் குறைக்கப்பட்டு இருக்கு. ஆனாலும் தற்கொலை என்பது தமிழ்ச் சூழலில் முக்கியமான ஒரு பிரச்சனையாக தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். புலம்பெயர் சூழலில் எல்லாம் நிறைய தற்கொலை நடந்தது. அது சில சமயங்களில் தமிழர்கள் மத்தியில் இந்த பரம்பரையியல் தாக்கம் நிறைய இருக்குதா என்றும் நாங்கள் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். உளவியல் சார்ந்த விழிப்புணர்வும் எங்கட சமூகத்தில் இல்லைதானே. அதுகள் சார்ந்தும் நாங்கள் கூட கவனம் எடுக்க வேண்டும். மிகக் கஷ்டமான ஒரு விடயத்தை எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

இப்ப உங்களிடம் நான் நினைக்கிறேன் ஒரு குற்ற உணர்வு இருக்கிறது என்று.

அசோக்: அது நீண்ட காலமாக இருக்கிறது. அதனால் தான் பேர்சனல் வாழ்க்கையை கதைக்கும் போது இதையெல்லாம் கதைக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு ஒரு ஃப்ரீ வேண்டும். நான் ஆரம்பத்திலேயே களுதாவளை பற்றி கதைக்கும் போது இதை கதைக்கவில்லை. ஏனென்றால் பர்சனல் வாழ்க்கை வரும்போது இதைப்பற்றி கதைக்கலாம் என்று இருந்தேன். ஏனென்றால் ஒரு அரசியல் சமூக வாழ்க்கையில் ஈடுபடும் எனக்கு ஒரு ஒளிவுமறைவு இருக்கக் கூடாது.

தேசம்: இந்தக் கடந்த கால வாழ்க்கை சம்பவங்கள் பற்றி ஜெயந்தி எப்படி உணர்ந்துகொண்டா? அவ அப்படி உங்களுக்கு ஆறுதலாகவும் துணையாகவும் இருந்தார் என்பதை சொன்னீர்கள் என்றால் இதை பார்க்கிறவர்களுக்கும் சிலவேளை உதவியாக இருக்கும்.

அசோக்: கடந்த கால வாழ்க்கை தொடர்பாக நான் ஜெயந்தியிடம் மாத்திரம் அல்ல, செல்வியோடையும் நிறைய கதைத்திருக்கிறேன். ஏனென்றால் குடும்ப வாழ்க்கைக்கு முக்கியமான அடிப்படை மனம் திறந்த உரையாடல். அது எங்களில் குற்றம் இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ள வேண்டும். நியாயப்படுத்தல் செய்ய இயலாது நாங்கள். லீலாவின் மரணம் தொடர்பாக நான் நியாயப்படுத்த இயலாது. எனக்கு அதில் எந்த விதமான காரணமும் இல்லையென்று. நாங்கள் இன்னுமொரு பக்கத்தில் போய் குற்றத்தை போடக்கூடாது. அந்த இறப்புக்கு காரணம் வெளிப்படையாக தெரியாவிட்டாலும் நான் யோசிக்கிறன் நான்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று. நான் என் பேனா நட்புக்கள பற்றி லீலா கேட்காவிட்டாலும் நான் அந்த உறவுகள் பற்றி அவங்களோடு கதைத்திருக்க வேண்டும்.

ஜெயந்தியிடம் என் கடந்த கால வாழ்க்கைப் பயணம் பற்றி வெளிப்படையாக மனம் விட்டு கதைத்திருகிறன். குடும்ப வாழ்க்கைக்கும் சுய விமர்சனம் அவசியம். அப்பதான் எங்கட தவறுகளை திருத்திக் கொள்ளமுடியும். பரஸ்பரம் நம்பிக்கைகளை ஏற்படுத்திக்கொள்ளமுடியும்.

தேசம்: ஒன்று அதை நீங்கள் வெளிப்படையாக சொல்லியும் இருக்கிறீர்கள். அதே நேரம் அவர்களும் அதை உணர்ந்து கொண்டு ஒரு சுமுகமான உறவை வாழ்க்கைப் பயணத்தை நீங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள். அந்த வகையில் மிகவும் மகிழ்ச்சி. அதே சமயத்தில் நீங்கள் எந்த குற்ற உணர்வில் வாழ வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அவங்களுடைய எண்ணம் துரதிஷ்டவசமாக அப்படி அமைந்துவிட்டது. அதற்காக நீங்கள் குற்றவாளியாகவோ அல்லது குற்ற உணர்வுடனோ வாழ வேண்டிய அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். இவ்வளவு விடயத்தையும் மனம் திறந்த கதைத்ததற்கு உங்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்த பாகத்தில் புலம்பெயர் சூழலில் இருந்த அரசியல் இலக்கிய சூழல் அதுக்கு ஊடாக உங்கள் பயணத்தை பற்றி பார்ப்போம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *