ஆமை புகுந்த வீடும் ராகவன், நிர்மலா, ஷோபாசக்தி புகுந்த இலக்கியச் சந்திப்பும்! : பாகம் 34

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 34 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

தேசம்: நாங்கள் பரிசில் நடந்த கலை இலக்கிய முரண்பாடுகள் பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறோம். அதுல நீங்கள் சொல்லி இருந்தீர்கள் எக்ஸில் முரண்பாடு. அன்றைக்கு முக்கியமாக ஷோபாசக்தி அந்த முரண்பாட்டை தூண்டியதாக குற்றம்சாட்டி இருந்தீர்கள். அது என்ன மாதிரி நடந்தது? எக்ஸில் அது என்ன பிரச்சனை?

அசோக்: எக்சில் சஞ்சிகையில் ஏற்பட்ட முரண்பாடுகள் கோட்பாடு சார்ந்த பிரச்சனை இல்லைத்தானே கோட்பாடுகளில் சினேக முரண்கள்தோன்றினால் விவாதங்கள், உரையாடல்கள், கற்றல்கள் முலம் தீர்த்துக் கொள்ளலாம். கோட்பாடு ரீதியான பெரிய முரண்பாடுகள் வந்தா ஒன்று சேருவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாமல் போகும். இது தனிப்பட்ட முரண்பாட்டில் இருந்து தான் தோற்றம் பெறுது. இங்க கோட்பாடும் இல்லை. சித்தாந்த பிரச்சனையும் இல்லை. முழுக்க முழுக்க தனிநபர் முரண்பாடுகள்தான். இங்க ஈகோ பிரச்சனைதான். இதை இலகுவாக தீர்த்திருக்க முடியும். திட்டமிட்டு சாதிய முரண்பாடாக்கி ஊதிப் பெருக்கடி வைத்த புண்ணியம் நம்ம சோபாசத்தியைத்தான் சாரும். இந்த காலகட்டத்திலதான் தமிழ்நாட்டில் தலித்திய இலக்கிய அரசியல் ஏழுச்சி கொள்ளுது. அப்ப இந்த தனிப்பட்டமுரண்பாடுகளை சாதிய பிரச்சனை சார்ந்த முரண்பாடாக கட்டமைத்தால் இவர்களுக்கு சாதகம் என சோபாசக்தியின் சாணக்கிய மூளை கணக்குப்போட்டு இருக்கும்.

தேசம்: இதுக்குள்ள சாதிய முரண்பாடு என்று சொல்லுற அளவுக்கு இல்லை. பெரும்பாலும் இதுக்குள்ள அரசியல்ரீதியாக இருந்தவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் சாதிய எதிர்ப்பை கொண்டவங்கதானே.

அசோக்: தனி நபர் முரண்பாட்டை கூர்மையாக்க மற்றவர்களின் ஆதரவை பெற கலைச்செல்வன், லக்சுமி ஆட்கள் மீது இவ்வாறன குற்றச்சாட்டை வைக்க வேண்டிய தேவை அவங்களுக்கு வருகிறது. இந்த முரண்பாட்டிக்கு நீங்கள் நியாயம் கற்பிப்பதற்கான தேவை ஒன்று ஏற்படும் தானே. ஒவ்வொரு சாதியிலும் பிறப்பது தற்செயல் நிகழ்வு. ஆதிக்க சாதியான வேளாளர்கள் என்று சொல்லப்படுகின்ற சமூகத்தில் பிறக்கிற ஆட்களை வந்து முழுக்க முழுக்க எங்கள் மீதான ஒடுக்குமுறையாளர்கள் என்று கருத இயலாது. ஏனென்றால் அதிலும் நல்ல சக்திகள் உண்டு. ஒடுக்குமுறைக்கு எதிராக செயற்படுகின்ற இடதுசாரி கருத்தியல் கொண்ட ஆட்கள் இருப்பார்கள். இலங்கையில் நடந்த சாதிய எதிர்ப்புப் போராட்டங்களை கவனித்தம் என்றால் அந்த போராட்டங்களில் தீவிரமாக முண்ணனி வகித்தவங்க வேளாள சமூகத்தை சேர்ந்த தங்களை சாதிய தற்கொலை செய்து கொண்ட இடதுசாரிய கருத்தியல் கொண்ட தோழர்களாக இருப்பாங்க.

எங்களை ஒடுக்கிற ஆதிக்கம் செலுத்துகிற தங்களின் சுய சாதியிலிருந்து விடுபட்டு தோழமையோடு எம்மை நோக்கி வருகின்ற சக்திகளை நாம் சாதியின் பெயரால் புறம் தள்ளக் கூடாதுதானே. இவங்களிட்ட சாதியம் தொடர்பான எந்த புரிதல்களும் இருக்கல்ல. கோட்பாட்டு அரசியலும் இருக்கல்ல. தங்களை முதன்மைப்படுத்துற அடையாள சிக்கல்தான் இவங்களிட்ட இருந்தது. இது கலைச்செல்வன், லக்சுமி பக்கத்திலிருந்து பறிக்கப்படுவதாக இவங்க நினைக்கும் போது இந்த முரண்பாடுகள் வருகிறது. இவங்களால சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்குதானே அந்தக் காரணங்கள் எல்லாம் வந்து சோடிக்கப்பட்ட கட்டுக்கதைகள் ஆகத்தான் இருந்தது. அதற்கான உருவாக்கத்திற்கான பின்புலமாக சோபாசக்தி தான் இருந்தவர். சோபாசக்தி நினைத்திருந்தால் அந்த பிரச்சனையை தீர்த்து இருக்கலாம்.

நான் எப்பவுமே புலிகள் மீதான விமர்சனத்தை வைப்பதற்கான காரணம் என்னவென்றால் புலிகள் எப்பவுமே ஒரு ஜனநாயக அமைப்புகளை ஜனநாயக சக்திகள் ஒன்று கூடுவதை எப்பவுமே விரும்புவது இல்லை. எங்க போராட்ட வரலாற்றை எடுத்து பார்த்தீர்களென்றால் ஈழத்தில் தமிழ்ப் பிரதேசங்களில், புகலிட நாடுகளில் சகல ஜனநாயக அமைப்புகளை உடைத்தது எல்லாம் புலிகள்தான். அதுக்குள்ள ஊடுருவுவார்கள் அல்லது அப்படியே உள்வாங்குவார்கள். அல்லது அதிகாரத்தை பயன்படுத்தி அப்படியே இல்லாமல் ஆக்குவார்கள். இதில் அபத்தம் என்னவென்றால் கலைச்செல்வன், லக்சுமி ஆளுமைக்குள் உட்பட்டிருந்த இவங்கள், சுயநலப்போக்கும், மோசமான அரசியலும் கொண்ட பிழையான சத்தியான சோபாசக்தியின் வலையில் சிக்கிக் கொண்டதுதான்.

தேசம்: புலிகள் எதையுமே உருவாக்கினது கிடையாது…

அசோக்: ஷோபாசக்தி புலிகளில் இருந்து வந்தபடியால் அவரிடமும் அந்த இயல்பு இருக்கும்.

நான் முதலே சொல்லிஇருக்கிறன் புலிகளிடமிருந்து வந்த யாரையும் நம்புவதும் இல்லை, நான் ஏற்றுக்கொள்வதும் இல்லை. போராளிகள் பற்றியதல்ல இந்த அபிப்பிராயம். புலிகளில் குறிப்பிட்ட மட்டங்களில் கருத்தியல் சார்ந்து இயங்கிய எல்லாரிடமும் தங்களைத் தவிர ஏனைய அமைப்புகள் உருவாகுவதையோ ஏனைய சக்திகள் உருவாகுவதையோ அவங்கள் விரும்புவது இல்லை. ஒரு இலக்கிய சஞ்சிகையோ, இலக்கிய சந்திப்போ சாதாரண அமைப்புகள் கூட தங்களை வரக்கூடாது என்றுதான் விரும்புவார்கள்.

தேசம்: தங்கட கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைக்கினம்…

அசோக்: அப்படி தங்கட கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றால் உடைப்பார்கள் அல்லது அவர்கள் மீது ஏதும் அதிகாரத்தை பிரயோகிப்பார்கள். இலக்கிய சந்திப்புக்கும் அதுதான் நடந்தது. எக்ஸிலுக்கும் அதுதான் நடந்தது.

தேசம்: நீங்கள் இதே குற்றச்சாட்டை தான் ராகவன் நிர்மலா நித்தி மீதும் வைத்தீர்களா?

அசோக்: என்னைப் பொருத்தவரை இவர்கள் புலிகளை எதிர்க்கின்ற இன்னொரு புலிகள்தான். அதுல நீங்கள் ராகவன் ஆக இருந்தால் என்ன, நித்தியானந்தனாக இருந்தா என்ன நிர்மலாவாக இருந்தால் என்ன, முழு பேரும் அந்த மனோநிலையோடு, அந்த அந்த ஆதிக்க உளவியல் கட்டமைப்போடுதான் சிந்திப்பாங்க செயற்படுவாங்க. இவர்களை எல்லாம் ஒரு ஜனநாயக சக்தியாக நான் ஒருபோதும் பார்க்கவில்லை. ஏனென்றால் இருக்கிற முரண்பாடுகளை தீர்க்கின்ற நபர்களாக அவர்கள் எப்பொழுதும் இருந்ததில்லை. முரண்பாடுகளை கூர்மையாக்கி, குழுவாதத்தை உருவாக்கி தாங்க நினைப்பதை சாதிப்பாங்க. அதற்கு நாங்களும் துணை போவம். நீங்க பார்த்தீங்க என்றால் இவங்களுக்கு பின்னால் நாங்கதான் போனோமே தவிர எங்களுக்கு பின்னால் அவங்க வரவில்லை. தங்களின் அதிகாரத்தில் மேலாதிக்கத்தில் அவங்க கவனமாக இருந்தாங்க.

எல்லாத்தின் உடைவுகளுக்கும் மூல காரணங்களை தேடி போனீர்கள் என்றால் புலிகளில் இருந்த பழைய உறுப்பினர்களாக தான் இருப்பார்கள். ஒன்று சோபாசக்தி ஆக இருக்கும் ஒன்று ராகவன் ஆக இருக்கும், ஒன்று நிர்மலாவாக இருக்கும், இவர்கள்தான் பின்புலமாக இருந்திருப்பார்கள். இலக்கியச் சந்திப்புகளின் உடைவுகளை தேடி போனீர்கள் என்றால் முடிவு அங்க தான் இருக்கும். ஆனா என்னதான் உடைவு இருந்தாலும் சோபாசக்தி, ராகவன், நிர்மலா எனைய முன்னாள் புலிகள் இவங்களுக்குள்ள ஒற்றுமை இருக்கும். ஒரே அணியில இருப்பாங்க. யோசித்துப்பாருங்க. புலிகளின் வன்முறைகளுக்கும் கொலைக் கலாச்சாரத்திற்கும் எதிராக புகலிடத்தில் செயற்பட்ட TBC ரேடியோவுக்கு என்ன செய்தார்கள்? உங்க தேசம் இணையத்தளத்தை முடக்க தங்களின்ற குழுவாத கும்பல்களோடு சேர்ந்து கையெழுத்து வேட்டை நடத்தினாங்களே. இதையெல்லாம் எந்த நோக்கத்தில் செய்தாங்க.

தேசம்: புலிகள் என்பதும் எங்களுடைய சமூகத்தின் ஒரு உற்பத்தி தானே. நீங்க சொல்லுற இந்த குணாம்சம் இந்தப் பிரிவிடம் மிகக் கூடுதலாக இருக்கு என்று சொல்லவாறீர்களா?

அசோக்: எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் இந்தக் குணாம்சம் கொண்டவர்கள்தான் புலிகளிடம் போகிறார்களா அல்லது புலிகளுக்கு ஒரு சிந்தனை முறை இருக்குதானே புலிகளுடைய பயிற்றுவிப்பு கல்வியூட்டல்கள் சிந்தனை முறை இருக்குதானே அது இப்படித்தான் இவர்களை உருவாக்கிறது. தங்களை மீறி யாரும் வரக்கூடாது என்று. ஜனநாயக சக்திகளோ, தங்களை கேள்வி கேட்கின்றவர்களோ தங்கட இருப்புக்கு அது தடையாக இருக்கிறது என்று நினைப்பார்கள். தங்கட இருப்புக்கு ஒரு அமைப்பு சாதகமாக இருக்கும் பட்சத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பார்கள். இல்லாதபட்சத்தில் அதை அழிப்பார்கள். இல்லாட்டி இவ்வளவு ஆரோக்கியமான இலக்கியச் சந்திப்புக்கு கடைசியில் என்ன நடந்தது?

இன்னொன்றையும் நீங்க அவதானிக்கலாம். புலிகள் பலரிடம் இந்த திறமை இருக்கு. எங்கட பலவீனங்களை கண்டு பிடித்து அதற்கு தீனி போடுவாங்க. பலரும் இவங்க பின்னால் அலைவதற்கு இதுவும் ஒருகாரணம். முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொள்கிற நாங்க தனிப்பட்ட வாழ்வில் மிகமிக பலவீனமானவங்க. அத அவங்க தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறாங்க. எவ்வளவுதிறமை சாலி அவங்க பாருங்க.

தேசம்: இலக்கிய சந்திப்பு எப்படி இப்படி உடைந்தது ?

அசோக்: இலக்கியச் சந்திப்பின் உருவாக்கம் சிறு சஞ்சிகைகளினுடைய ஆசிரியர்களின் வாசகர்களின் இணைவாக இருந்து ஒரு காலகட்டத்தில் அராஜகங்களுக்கு எதிரான ஒரு வடிவமாக வருது ஜனநாயகத்தையும், அதிகார எதிர்ப்பையும் முன்னிலைப்படுத்திய புகலிட இலக்கியச்சந்திப்பை சார்ந்தவர்கள், விடுதலைப் புலிகளால் புகலிடத்திலும், இலங்கையிலும் இருந்த அச்சுறுத்தலால், விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்களாக இருந்தது இயல்பாக இருந்தது. அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரான ஒரு இயல்பான அரசியல் அதுக்குள்ள மேலோங்கியிருக்கிறது.

நான் முதலாவது இலக்கிய சந்திப்பில் தொண்ணூற்றி மூன்றாம் ஆண்டு கலந்து கொள்கிறேன். அதுக்குப் பிறகு இரண்டு இலக்கிய சந்திப்பு பாரிசில் நடந்தது. அதை நாங்கள் லக்ஷ்மி, கலைச்செல்வன், புஸ்பராஜா, அசோக் பிரகாஸ், கிருபன், மோகன், உதயன், யோகராஜா நடத்தினோம். நாங்க எல்லா இலக்கிய சந்திப்புக்கும் போவோம். ஜெர்மனியில்தான் அதிகம்தான் நடந்தது. 2009 மே முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின்பு நிலைமை நிலமை மாறிப் போய்விட்டது. முள்ளிவாய்க்கால் பிரச்சனைக்குப் பிற்பாடு இலக்கிய சந்திப்பு ஒரு டேர்ன் எடுக்குது. முழுக்க முழுக்க புலிகள் அழிக்கப்பட்டதன் பிற்பாடு பாரிசில் நடந்த இலக்கிய சந்திப்பில் இலங்கை அரசு சார்பான ஒரு போக்கை அவர்கள் எடுக்கிறார்கள். அந்த எடுவைக்கு காரணம் அதுக்குள்ள இருந்த ஒரு சக்திதான். அதுல தலித் முன்னணி முக்கியமான ஆட்கள். அதுல ஷோபா சக்தியும் இருந்தவர். அடுத்தது ராகவன் ஆட்களும் அதுக்குள்ள இருந்தார்கள்.

புலிகள் மீது கடும் விமர்சனம் இருக்கு. முள்ளிவாய்க்கால் தொடர்பாக. பொதுமக்கள் அழிக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம் புலிகளுடைய நடவடிக்கையும் ஒன்று. அது விமர்சிக்கப்பட வேண்டியது. புலிகள் மீது கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட வேண்டியது. அதற்காக நீங்கள் பேரினவாத அரசின் ஆதரவு சக்தியாக மாற முடியாது. நான் முள்ளிவாய்க்கால் படுகொலையை ஒரு இனப்படுகொலை என்றுதான் பார்க்கிறேன். அது தொடர்பாகக் கருத்து முரண்பாடு இருக்கலாம். மிக மோசமாக கொத்துக் கொத்தாக மக்கள் படுகொலை செய்யப்பட்டதை மறந்து இலங்கையில் ஜனநாயக சூழல் உருவாகிவிட்டது, ஜனநாயக இடைவெளி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லி இலங்கைப் பேரினவாத அரசு ஆதரவு நிலை கொண்டு நடத்தும் போது எப்படி எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியும். எப்படி நாங்கள் கலந்து கொள்ள முடியும்? அப்போ நான் அதில் இருந்து ஒதுங்கிக் கொண்டேன். இலக்கிய சந்திப்பின் பிரதான நோக்கத்தையே குழிதோண்டி புதைத்து விட்டார்கள்.

அதற்கு பிற்பாடு லண்டனில் நடந்த இலக்கிய சந்திப்பில் முரண்பாடு வருகிறது. இலக்கிய சந்திப்பை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி நடக்குது. இந்த இலக்கிய சந்திப்பு புகலிடத்திற்காக, அதன் அரசியல் இலக்கிய சமூக வெளிக்காக உருவாக்கப்பட்டது. எனவே, இலங்கைக்கு கொண்டு போக முடியாதென்று என்று பலரும் இதை எதிர்க்கிறாங்க. புகலிட இலக்கியச் சந்திப்பை இலங்கைக்கு கொண்டு போவதற்கான அவசியம், காரணம் என்ன என்ற முக்கியமான கேள்வி எங்களுக்கு எழுகிறது

தேசம்: புகலிடத்திற்காக உருவாக்கப்பட்ட இலக்கிய சந்திப்பை ஏன் இவர்கள் இலங்கைக்கு கொண்டு போக விரும்புகின்றார்கள்?

அசோக்: நல்ல கேள்வி. இவங்க முழுப்பேர்களுமே குறிப்பாக தலித் முண்ணனி, பிள்ளையான் அணி, ராகவனும் அவருடன் சேர்ந்த ஆட்களைப் பார்த்தீர்கள் என்றால், வெறும் இலங்கை அரசு ஆதரவாளர்களாக இருந்தார்களே தவிர தனித்துவ அடையாளங்கள் அற்றவங்க இவங்க. ஆழமான அரசியல் புரிதல்களோ, இலக்கிய ஆற்றலோ அற்றவங்க. இவங்க இலங்கைக்கு, வெறும் இலங்கை அரச விசுவாசத்தோடு தமிழ்ப் பிரதேசங்களுக்கு செல்லமுடியாது. அங்க யாரும் இவர்களை கவனிக்க மாட்டார்கள். அப்ப இவங்களுக்கு அடையாளம், ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. இலக்கிய சந்திப்புக்கு ஒரு வரலாற்று தடம் பங்களிப்பு இருக்கிறது. இலக்கிய சந்திப்பு பற்றி இலங்கையில் பெரிய எதிர்பார்ப்பு உண்டு. அப்ப இந்த இலக்கிய சத்திப்பினுடாக, அங்கு தங்கட அடையாளத்தை, இருத்தலை நிறுவ முயலுறாங்க இதுதான் நடந்தது.

தேசம்: இதை உங்களைப் போன்றவர்கள் எதிர்க்க வில்லையா?

அசோக்: இவர்கள் இலங்கை அரசு ஆதரவு நிலைப்பாடு எடுத்ததன் பின் இந்த இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்வதை நான் விட்டுட்டன். ஆனா இவர்களின் இந்த செயற்பாட்டிக்கு எதிராக கடும் கண்டனங்களை எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறன். நான் சிறிரங்கன், நாவலன் பலர் இதுபற்றி எழுதியுள்ளோம்.

இலங்கைக்கு கொண்டு போவதற்கு இவங்க முடிவு செய்த லண்டன் இலக்கிய சந்திப்பில் பலர் இதனை எதிர்த்திருக்காங்க. கிருஸ்ணராஜா, லட்சுமி, சுசிந்திரன், றஞ்சி, சிவலிங்கம் தோழர் போன்றவங்க. புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு இது. நீங்கள் நாட்டுக்கு கொண்டு போக இயலாது என்று. அதை மீறித்தான் அவங்க அங்கு கொண்டு போகிறார்கள். அப்போ இந்த ஜனநாயகப் பண்பை எப்பவும் ஏற்கவில்லை தானே இவர்கள். நாங்கள் எதற்காக ஒரு அமைப்பை உருவாக்கினோம், எதனை நோக்கி உருவாக்கினோம் என்ற அடிப்படை அம்சங்கள் எல்லாவற்றையும் இல்லாமலாக்கிப்போட்டு, நீங்கள் உங்களுடைய சுயநலத்துக்காக, உங்களுடைய அரசியலுக்காக கொண்டு போகின்ற போக்கு இருக்குதானே அது எனக்கு பெரிய அதிருப்தியாக இருந்தது.

இந்த ஜனநாயகத் தன்மை கொண்ட இலக்கிய சந்திப்பை தங்களின்ற அதிகார மேலாண்மை இருத்தலுக்காக பயகன்படுத்திக் கொண்ட இந்த நபர்களை பார்த்தால், இவங்களின்ற இந்த இலக்கிய சந்திப்பு தொடர்பு இடைக்காலத்தில்தான் ஏற்பட்டது. ஆனால் இந்த குறுகிய காலத்தில் தங்களுக்கேற்ற குழுவாதத்தை முரண்பாட்டை உருவாக்கி இலக்கிய சந்திப்பை தங்கள் உடமையாக்கிக் கொண்டாங்க. இதனைத்தான் நான் புலிக்குணம் என்றது. இதுதான் எனக்கு இருந்த விமர்சனமே தவிர தனிப்பட்ட ரீதியில் இவங்களோட எந்த முரண்பாடுகளும் எனக்கில்லை. சந்திக்கும்போது கதைப்பதுண்டு. அதேநேரம் கருத்துக்களும் விமர்சனங்களும் எனக்கு இருக்கும். இங்க ஒன்றை பதிவு செய்யணும். இவங்கட முரண்பாட்டிக்கு பிறகு இவங்க வெளியிட்ட எக்சில் சஞ்சிகையின் அட்டையில் லக்சுமியைபற்றி மிக மோசமாக தாக்கி எழுதி இருந்தாங்க. ஒரு இலக்கிய சஞ்சிகையின் அட்டையில் ஒருவரை தாக்கி மோசமாக எழுதி வெளியிட்ட பெருமை இவங்களைத்தான் சாரும்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *