“தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டறை நாய் மாதிரி. தாங்களும் செய்ய மாட்டார்கள்..,” – அமைச்சர் டக்ளஸ்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டறை நாய் மாதிரி. அதாவது தாங்களும் செய்ய மாட்டார்கள். செய்பவர்களையும் விட மாட்டார்கள். என கடற்றொழில் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த இன்று கடற்றொழில் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த துறைமுகத்தை பார்வையிட்ட பின்னர் அங்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி கட்டியெழுப்புவதற்கு பல வேலைத் திட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தின் மக்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டறை நாய் மாதிரி. அதாவது தாங்களும் செய்ய மாட்டார்கள். செய்பவர்களையும் விட மாட்டார்கள். எனவே, நான் கொண்டு வருகின்ற திட்டங்கள் யாவும் மக்கள் நலன் சார்ந்ததாகும்.

கடந்த 2008 ஆம் ஆண்டில் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் 2013 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியும், துறைமுக அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸவால் திறந்து வைக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட போதிலும் ஒரு வர்த்தக கப்பல் கூட ஒலுவில் துறைமுகத்துக்கு இது வரை வரவே இல்லை. ஏனெனில் மணல் நிரம்புவதால் இதுவரை எவ்வித பயனையும் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் பிரகாரம் ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் செயற்பாடுகளை சம்பிரதாயபூர்வமாக மீள ஆரம்பிப்பதற்கும் குறித்த துறைமுகத்திற்கு மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம் அஸ்ரப்பின் பெயரினை வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார். எனவே, இவ்விடயத்தில் வீணான அரசியல் செய்யாமல் அனைத்து தரப்பினரும் முன்வந்து ஒத்துழைப்புகளை வழங்க வேண்டு என கேட்டுக்கொண்டார். இதன் போது துறைசார் அதிகாரிகள் மீனவ சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த கால விஜயத்தின் போது முதல் கட்டமாக மீன் பதனிடும் தொழில் கூடங்கள் போன்றவை நிர்மாணிக்கப்பட்டு செயற்படுத்தப்ட்ட நிலையில் மீனவ சமூகத்தின் பாவனைக்கு அமைச்சரால் கையளிக்கப்பட்டுள்ளன.

பல மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தை பராமரிப்பதற்கு துறைமுக அபிவிருத்தி அதிகார சபை மாதாந்தம் 56 இலட்சம் ரூபாய் வரை செலவிட நேர்ந்தது. இந்நிலையில் கடற்றொழில் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பகீரத முயற்சிகளை தொடர்ந்து துறைமுக அமைச்சு, கடற்றொழில் வள் அமைச்சு ஆகியன கூட்டாக அண்மையில் சமர்ப்பித்த அமைச்சரவை யோசனை மூலமாக கடற்றொழில் அமைச்சின் பொறுப்பில் ஒலுவில் துறைமுகம் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *