இலங்கையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட கண்ணீர் புகைக்குண்டுகள் கொள்முதல் தொடர்பான மறைக்கப்பட்ட தகவல்களை வெளியிடுமாறு காவல்துறை திணைக்களத்துக்கு, தகவல் அறியும் உரிமை ஆணையம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் மே 24ஆம் திகதி வரை எவ்வளவு கண்ணீர்ப்புகை இறக்குமதி செய்யப்பட்டது மற்றும் எத்தனை தடவைகள் எவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டது என்பதை அறிய தருமாறு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூகம் மற்றும் மதத்திற்கான மையம் கடந்த மே மாதம் கோரிக்கை விடுத்திருந்தது.
சட்ட நடைமுறைப்படுத்தல் அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களின் ரகசியத்தை அம்பலப்படுத்தும் என்பதன் காரணமாகவே இந்த தகவல்களை வெளியிட காவல்துறை திணைக்களம் அதனை நிராகரித்திருந்தது.
இதனையடுத்து, சமூகம் மற்றும் மதத்திற்கான மையம் தாக்கல் செய்த மேன்முறையீட்டின் கீழ், 2022,ஜூலை 18 ஆம் திகதியன்று, தகவல் அறியும் உரிமை ஆணையம் இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது. அதில் காவல்துறை திணைக்களத்தின் காரணம் பொருந்தாது என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
எனவே கோரப்பட்ட காலத்திற்குள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணீர்ப்புகையின் அளவு, அதற்கான குறிப்பிட்ட காலங்கள் மற்றும் அதற்கான நிதிச் செலவுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் அதன் இடைக்கால உத்தரவு கிடைத்தவுடன் உடனடியாக வெளியிடுமாறு, தகவல் அறியும் உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.