மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் 99 தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை நடத்திய குண்டுதாரி குறித்த மாவட்டத்தில் அடிக்கடி நடமாடியதாகவும் அப்பகுதியிலேயே நீண்ட நாட்களாக தங்கியிருந்துள்ளார் என்றும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இந்த சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
முன்தினம் நேற்று இரவு நேற்று அதிகாலை வரை நடத்தப்பட்ட இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 2ஆயிரத்து 399 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் கூறியதாவது மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ மொரவக்க பிட்டபெத்தர மற்றும் தெனியாய போன்ற பகுதிகளிலுள்ள தொட்டப்புரங்களிலேயே இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது.
இதன் போது 759 வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் 2ஆயிரத்து 399 பேர் தீவிர விசாரணைகளுக்கு எட்படுத்தப்பட்டனர். இவர்களில் தமது பதிவை உறுதிப்படுத்தத் தவறிய 99 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
நூற்றுக்கணக்கான பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய இந்த தேடுதலின் போது கைதான அனைவரும் அந்தந்த பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். உரிய விசாரணைகளை அடுத்து அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.