“88 – 89 ஆம் ஆண்டு காலகட்டங்களை போல இன்னமும் தடிகள், வாள்கள், கத்திகளுடன் தான் ஜே.வி.பி.” – நாமல் ராஜபக்ச விசனம் !

மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட கடந்தகால மனோநிலையிலேயே மக்கள் விடுதலை முன்னணி தற்போதும் இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

மக்கள் விடுதலை முன்னணியில் ஒரளவு மாற்றம் ஏற்பட்டிருக்கும் என நான் எண்ணியிருந்த போதிலும் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அவர்கள் செயற்பட்ட விதமானது 88 மற்றும் 89 ஆம் ஆண்டு காலகட்டங்களின் அவர்களின் நடத்தையை மீண்டும் பிரதிபலிக்கின்றது.

மக்கள் விடுதலை முன்னணி, தமது தடிகள், வாள்கள், கத்திகள் மற்றும் தீப்பந்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக தொழிலாளர்களுடன் இணைந்து கொண்டதாக நான் எண்ணியிருந்தேன்.

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் ஜே.வி.பி.யும் இணைந்துகொள்வதற்கான கொள்கைத் தீர்மானத்திற்கு வரும் என எண்ணிய போதிலும் அவ்வாறு தெரியவில்லை.

இதே நேரம்  நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக தற்போதைய ஜனாதிபதி குறிப்பிட்ட சில நடைமுறையை நடைமுறைப்படுத்தி வருகிறார். மேலும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கும் தனது சொந்தக் கொள்கைகளுக்கும் ஒரு மையப் புள்ளியைக் கண்டறிய ஜனாதிபதி முயற்சிக்கிறார்.

ஆகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சிறந்த ஆதரவை வழங்குவோம். அரசியல் கொள்கை என்று வரும்போது நாம் தனித்தனியே நின்று செயற்படுவோம்.

எனினும் ஜனாதிபதியும் நானும் நாட்டில் உள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இரு தரப்பினருக்கும் இடையில் கொள்கைகளை கொண்டு வர முயற்சிக்கிறோம் எனவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *