இலங்கையில் இன்று முதல் அமுலுக்கு வருகிறது 21ஆவது அரசியலமைப்பு !

இலங்கை நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இன்று தனது கையொப்பத்தையிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி இந்த சட்டத் திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இலங்கை அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூல வரைவை பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்திருந்தது.

எனினும், அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென உயர்நீதிமன்றம் வியாக்கியானத்தில் அறிவித்தது. இந்த நிலையில் அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலம் கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் பின்னர் இதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்துக்கமைய நீதி அமைச்சர் ஆலோசனைக் குழுவில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 20 மற்றும் 21ஆம் திகதிகளில் குறித்த திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. அதில் இரண்டாவது மதிப்பீட்டின் இறுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குழுநிலையில் திருத்தங்கள் உள்ளடக்கப்பட்ட பின்னர் மூன்றாவது மதிப்பீட்டுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 174 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இந்தத் திருத்தச் சட்டமூலம் 22ஆவது அரசியலமைப்பு திருத்தமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோதிலும், அது 21ஆம் திருத்தமாக அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று சான்றுபடுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தகக்து.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *