காணாமலாக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பை இராணுவத்தினரிடம் ஒப்படைத்து நீதிமன்றம் ஆணை – சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல்

விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைபொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்டபோரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோரை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை வவுனியா மேல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

டிசம்பர் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த ஆட்கொணர்வு மனு வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போது காணாமல் ஆக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பை இராணுவத்தினரிடம் ஒப்படைத்து நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனை முற்படுத்தவேண்டும் அல்லது அவருக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிவிக்கவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு தொடர்பில் தாங்கள் எதையும் அறியவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நீதிமன்ற உத்தரவு தொடர்பில் ஊடகங்கள் கேள்வியெழுப்பிய போது, அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“நான் தற்போது முன்னாள் அதிபர், அதேவேளை, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலர். ஆகவே எழிலன் தொடர்பான நீதிமன்ற உத்தரவு தொடர்பான தங்கள் கேள்விக்கு பதிலளிக்கக்கூடிய நிலைமையில் நான் தற்போது இல்லை.

அதுமட்டுமன்றி, நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தொடர்பில் நான் இன்னமும் அறியவில்லை. எனவே, அறியாத விடயத்துக்குப் பதிலளிக்க நான் விரும்பவில்லை” என்று கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதேபோன்றே சரத் பொன்சேகாவும், இந்த உத்தரவு தொடர்பில் இன்னமும் தான் அறியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *