பட்ஜட் தோல்வி – பதவி விலகினார் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன்

யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

நாளை சனிக்கிழமை (31) முதல் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக யாழ் மாநகரசபை ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதம் மூலம் அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

கடந்த டிசம்பர் 21ஆம் திகதி இடம்பெற்ற யாழ் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இரண்டாவது தடவையாக வரவு செலவுத் திட்டம் சமர்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும் கட்சிகளின் ஆதரவு கிடைக்காது என்பதன் அடிப்படையில் மணிவண்ணன் ராஜினாமா முடிவை எடுத்ததாக மணிவண்ணன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

2020 டிசம்பர் 30 இல் மாநகர முதல்வர் பதவிக்கு ஆர்னோல்டும், மணிவண்ணனும் போட்டியிட்டனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் முதல்வராக தெரிவானார்.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3
உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகள் மணிவண்ணனால் முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் ஆதரவால் வெற்றி பெற்றது என்பதும் இந்த ஆண்டு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *