“இலங்கை , இந்தியாவில் தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கு பிரபாகரனின் பெயரை அடிக்கடி உச்சரிக்காவிட்டால் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது.” – சரத் பொன்சேகா

பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும் அவர் விரைவில் நலமுடன் திரும்பி வருவார் எனவும் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நேற்று அறிவித்திருந்தார்.

அவரது இந்த அறிவிப்பைக்கு இலங்கை அரசியல்வாதிகள் பலரும் கடுமையாக தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர “ பிரபாகரன் இப்போது நரகத்தில்தான் இருக்கிறார்.   பிரபாகரனை அழைத்துவர விரும்பினால் பழ.நெடுமாறனும் நரகத்துக்குதான் போக வேண்டும். அங்குபோய்தான் பிரபாகரனை அவர் அழைத்து வர வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இறுதிப் போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்த போது,

14 ஆண்டுகளாக பழ.நெடுமாறன் பொய்யையே திரும்ப திரும்ப சொல்லி வருகிறார். பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகன்களான சார்லஸ் அன்ரனி, பாலச்சந்திரன் மற்றும் மகள் துவாரகா ஆகியோரும் இறுதிப் போரில் உயிரிழந்துவிட்டார்கள். பிரபாகரன் குடும்பத்தில் எவரும் தப்பவில்லை. போராட்டத்தில் தனது குடும்பத்தையே அர்ப்பணித்தவராக பிரபாகரன் திகழ்கின்றார். இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கும், இந்தியாவிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கும் பிரபாகரனின் பெயரை அடிக்கடி உச்சரிக்காவிட்டால் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது.

அவர்களில் ஒருவர்தான் பழ.நெடுமாறன். அவர் இறுதிப்போர் நிறைவடைந்த காலம் தொட்டு இன்று வரைக்கும் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்ற பொய்யான தகவலை வெளியிட்டு வருகின்றார். தற்போது அவர், பிரபாகரன் மட்டுமன்றி அவரின் மனைவியும், மகளும் உயிருடன் உள்ளார்கள் என்றும், மூவரும் நலமாக உள்ளார்கள் என்றும் மேலும் பொய்யான தகவலை வெளியிட்டு தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *