இலங்கையில் உள்ள குரங்குகளுக்கு சீனாவில் மிகப் பெரிய கேள்வி இருப்பதாகவும் நாட்டில் பெருகி வரும் குரங்குகளின் எண்ணிக்கைக்கு தீர்வுகாணும் வகையில் அவற்றை சீனாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் குரங்குகளை சீனாவில் உள்ள விலங்கியல் பூங்காக்களுக்கு வழங்குமாறு சீனப் பிரதிநிதிகள் விவசாய அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
இந்த கோரிக்கைக்கு அமைய ஒரு லட்சம் குரங்குகளை முதல் கட்டமாக சீனாவுக்கு வழங்குவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை பத்தரமுல்லையில் உள்ள விவசாய அமைச்சில் இன்று நடைபெற்றது.
அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், விவசாய அமைச்சின் அதிகாரிகள், விலங்கியல் பூங்கா திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தைக்கு அமைய இலங்கையின் குரங்குகளை வெளிநாடு ஒன்றுக்கு வழங்கும் போது நடைமுறையில் உள்ள சட்ட நிலைமைகள் சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவையின் அனுமதியுடன் குழு ஒன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை சுமார் 30 லட்சம் தெரியவந்துள்ளது. நாட்டில் விவசாய பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும்விலங்குகளில் குரங்குகளே முன்னிலையில் உள்ளன.
அதிகரித்து வரும் குரங்குகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு கூறியுள்ளது.
வடமேல் மாகாணத்திலேயே குரங்குகளினால் அதிகளவான பயிர் சேதங்கள் ஏற்படுகின்றது.
இலங்கையில் குரங்குகளால், பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை கவனத்தில் கொள்ளும் போது குரங்குகளை பெற்றுக்கொள்ள நாடு ஒன்று முன்வந்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயம் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
முன்னதாக பயிர்களை அழிக்கும் குரங்குகளை கொல்ல விவசாயிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தததும் குறிப்பிடத்தக்கது.