விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. நான் இறுதி யுத்த காலத்தில் சில வாரங்கள் மட்டுமே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (2) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணு பரிசோதனை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. நான் இறுதி யுத்த காலத்தில் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன். அதனால் எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. எனக்கு அதை பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை.
பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது. அது மேல் மட்டத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியும். அவர்களே அதை கட்டுப்படுத்தினர் என்றார்.
இறுதி யுத்தத்தின் வெற்றியில் தனக்கும் கணிசமான பங்கு இருப்பதாக கடந்த காலங்களில் தெரிவித்து வந்த மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய இக்கருத்து முற்றிலும் முரணாக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.