நீதிமன்ற கட்டளையை மீறி குருந்தூர்மலையில் விகாரை கட்டிய தொல்பொருள் திணைக்களம் – முல்லைத்தீவு நீதிமன்றம் வெளியிட்டுள்ள கட்டளை !

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அத்துமீறி விகாரை கட்டப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பான கட்டளை ஒன்று இன்றைய தினம் முல்லைத்தீவு நீதவானால் வழங்கப்பட்டுள்ளது.

 

நீதிமன்ற கட்டளைகளை மீறி அங்கு கட்டுமானங்கள் இடம்பெறுவதாக குறித்த ஆலயத்தினுடைய பக்தர்களால் ஆதாரங்களுடன் விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்டிருந்தது.

அதை தொடர்ந்து அங்கு கட்டுமானப்பணிகள் இடம்பெற்றனவா..? என்பது தொடர்பாக ஆராய்வதற்காக நீதிமன்றத்தால் கள விஜயம் செய்யப்பட்டது.

ஏற்கனவே செய்யப்பட்ட கள விஜயத்தை கருத்தில் கொண்டு இன்றைய தினம் குறித்த கட்டளை வழங்கப்பட்டிருந்தது.

 

அதாவது கட்டளையை வழங்கிய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுள்ளன எனவும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளைகளை மதித்து நடைமுறைப்படுத்தவில்லை எனவும் கட்டளை வழங்கியுள்ளார்.

 

இதன்போது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஆலய நிர்வாகம் சார்பிலே முல்லைத்தீவு மாவட்டத்தின் சட்டத்தரணிகள் அனைவரும் முன்னிலையாகி இருந்ததோடு ஆலய நிர்வாகம் சார்பாக நிர்வாகிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம் ஏ சுமந்திரன், முன்னாள் மாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

இதேவேளையிலே தொல்லியல் திணைக்களம் சார்பாக தொல்லியல் திணைக்களத்தின் வவுனியா, முல்லைத்தீவு,மன்னார் மாவட்டங்களின் உதவி பணிப்பாளர் மற்றும் தொல்லியல் திணைக்கள சட்டத்தரணிகள் காவல்துறையினர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *