யாழ். சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – “முழுமையான அறிக்கை விரைவில் என்கிறார் அமைச்சர் கெஹலிய”

யாழ். சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் அடுத்த வார இறுதிக்குள் முழுமையான அறிக்கை தனக்கு கிடைக்கவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமியான சாண்டில்யன் வைசாலியின் இடது கையில் பொருத்தப்பட்டிருந்த மருந்து ஏற்றுவதற்காக பொருத்தப்பட்ட கனூலா காரணமாக ஏற்பட்ட தாக்கத்தால் அவரது கை மணிக்கட்டுக்கு கீழ் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சின் நடவடிக்ககைள் பற்றி வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுமியின் கை அகற்றப்பட்டமை துரதிர்ஷ்டவசமான நிகழ்வாகும். அந்த விடயம் சம்பந்தமாக வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல தரப்பட்டவர்கள் எனது கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதனையடுத்து எனது பணிப்புரையின் பேரில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஊடான விசாரணைகள் உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் அடுத்த வாரத்துக்குள் அந்த விசாரணைகள் பற்றிய முழுமையான அறிக்கை எனக்கு கிடைக்கவுள்ளது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *