மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு 1591 வீடுகள் !

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள வீடுகள் நாளை (17) கையளிக்கப்படவுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் 79.70 கோடி இந்திய ரூபா மதிப்பில் 1591 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தின் வேலூரை அண்மித்துள்ள மேல்மொனவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க உள்ளார்.

மேலும், காணொளி வாயிலாக 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்போருக்கான வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வேலூர் மாவட்டத்தில் மாத்திரம் 11 கோடி இந்திய ரூபா மதிப்பில் 220 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தை மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு வேலூரில் தொடங்கி வைத்தார்.

142.16 கோடி இந்திய ரூபா மதிப்பில் 3,510 வீடுகளைக் கட்டும் நடவடிக்கை இதன்போது ஆரம்பிக்கப்பட்டது.

நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரயில் மூலம் இன்று இரவு வேலூர் செல்வதுடன், நாளை இரவு ரயில் மூலம் சென்னை திரும்பவுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *