வவுனியா நகர பிரபல பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் ஒருவர் தும்புத் தடியால் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.
வவுனியா நகர பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 9ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கு, பாடசாலையின் பகுதித் தலைவராகிய ஆசிரியர் ஒருவர் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கும் மேலாக தும்புத்தடி மற்றும் சப்பாத்து கால்களால் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவன் மீண்டும் மீண்டும் தன்னை ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டத்தற்கு பதில் கூறாது அதற்கும் தன்னை தாக்கியதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார்.
எனினும், மாணவன் பெற்றோருக்கு இது தொடர்பாக எதுவும் கூறாத நிலையில் வீட்டில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தை கண்ட பெற்றோர் மாணவனிடம் அதுதொடர்பில் விசாரித்த போது, நடந்தவற்றை கூறி தனது அடிகாயங்களையும் உட்காயங்களையும் காட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாணவனை வைத்தியசாலையில் அனுமதித்த பெற்றோர் இது தொடர்பாக வைத்தியசாலை காவல்துறையினரிடம் மாணவன் மூலம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
மாணவனின் கடிதத்தினை கொண்டு வவுனியா தலைமை காவல் நிலையம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றில் மாணவனின் தந்தையால் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இதேவளை, குறித்த ஆசிரியரால் ஏற்கனவே ஒரு மாணவன் மீது தும்புத்தடி கொண்டு தாக்கிய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக பாடசாலை பெற்றோர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.